விரைவில் தேசிய அளவில் ஸ்டாலின் மாற்றத்தை கொண்டு வருவார் – திமுக எம்.பி திருச்சி சிவா பேச்சு

தமிழக முதல்வர் ஸ்டாலின் தேசிய அளவில் எதிர்கட்சிகளை ஒன்றிணைத்து, விரைவில் மத்தியில் மாற்றத்தை கொண்டு வருவார் என திமுக கொள்கை பரபரப்பு செயலாளர் திருச்சி சிவா எம்பி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மணவெளி தொகுதி திமுக சார்பில் கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி பொதுக்கூட்டம் மந்தைவெளி திடலிலில் நடைபெற்றது. புதுச்சேரி திமுக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான சிவா முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக திமுக கொள்கை பரபரப்பு செயலாளர் திருச்சி சிவா எம்பி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், மத்திய பாஜக அரசு பல பயங்கரமான சட்டங்களை நிறைவேற்றி வருகிறது. இதை எதிர்க்கக்கூடிய ஒரே கட்சியாக திமுக உள்ளது. ஜனநாயகத்தின் செயல்பாட்டின் தொடர்ச்சியில் என்றாவது ஒரு நாள் நீங்கள் ஆட்சியைவிட்டு விலக நேரிடும். அன்று நீங்கள் இயற்றிய ஒவ்வொரு சட்டத்திற்கும் நீங்கள் வேதனைப்படுகின்ற நாள் வெகுதூரத்தில் இல்லை என தெரிவித்தார்.

மத்தியில் இரண்டாவது முறையாக நீங்கள் ஆட்சிக்கு வந்தது உங்களது திறமையால் அல்ல, நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளால் அல்ல, எதிர்கட்சிகளிடையே ஒற்றுமை இல்லாததுதான் பாஜக வெற்றிக்கு காரணம் என கூறிய எம்பி சிவா,தமிழகத்தில் திமுக கூட்டணி கட்சிகளை அரவணைத்து சென்றதால்தான் பாஜக டெபாசிட்டை இழந்திருக்கிறது. இந்திய அளவில் எதிர்கட்சிகள் ஒன்றிணையக்கூடிய நாள் வரும். அதனை முதல்வர் ஸ்டாலின் முன்னெடுப்பார். அப்போது ஒரு மாற்றம் வரும் என்றார்.

மேலும் விரைவில் புதுச்சேரியில் திமுக ஆட்சியமைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். இந்த பொதுக்கூட்டத்தில் அவைத் தலைவர் எஸ்.பி.சிவக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார், தொகுதி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.