வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து பாலியல் தொல்லை – சிக்கிய அரிசி மண்டி உரிமையாளர்

சென்னை அருகே வீட்டில் தனியாக இருக்கும் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்த அரிசி மண்டி உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை கொடுங்கையூரில் கடந்த 23-ம் தேதி 50வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த மர்ம நபர் ஒருவன் வீட்டிற்குள் புகுந்து அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளான். அவனது பிடியிலிருந்து தப்பிய அந்தப் பெண் கூச்சலிட்டு உதவிக்கேட்டுள்ளார். அக்கம்பக்கத்தினர் ஓடி வருவதைக் கண்ட அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றான்.

இந்த நிலையில் ஏற்கனவே கைலியுடன் வந்த அந்த நபர் அடுத்தநாள் மீண்டும் டிப்டாப் உடையணிந்து அதே வீட்டிற்குள் நுழைய முயன்றுள்ளான். இதனைக்கண்ட அந்தப் பெண் கூச்சலிட்டதால் அவன் ஓட்டம் பிடித்தான். இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் மாதவரம் பால்பண்ணை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அந்தப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆராய்ந்து பார்த்ததில் கொடுங்கையூர் பகுதியில் அரிசி மண்டி நடத்தி வரும் ரமேஷ் (26) என்பது தெரியவந்தது. சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த நபரை பிடித்து விசாரித்தபோது ஏற்கனவே அவன் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இதன் காரணமாக அங்கிருந்து தலைமறைவான நபர் கோயம்புத்தூரில் சிலகாலம் தங்கி இருந்ததும் பின்னர் பிழைப்புக்காக சென்னை வந்து கொடுங்கையூர், மற்றும் மாதவரத்தில் அரிசி மண்டி நடத்தி மொத்த வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்தது.

மேலும் இதே போன்று பல பெண்களிடம் அந்த நபர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்ததும் இதுதொடர்பாக அடையாளம் தெரியாததால் பெயர் குறிப்பிடாமல் சென்னை புறநகர் பகுதி காவல் நிலையங்களில் புகார் இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து விசாரணைக்கு பின்னர் காவல்துறையினர் அரிசி மண்டி உரிமையாளர் ரமேஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.