இலங்கைக்குக் கடத்த இருந்த மூன்று கோடி ரூபா பெறுமதியான கடல் அட்டைகளுடன் ஒருவர் கைது.

இலங்கைக்குக் கடத்த இருந்த சுமார் 3 கோடி ரூபா மதிப்பிலான கடல் அட்டைகளுடன் ஒருவர் தமிழகப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டம், பட்டிணம் காத்தான் பகுதியில் இருந்து இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பதப்படுத்தப்பட்ட 200 கிலோ கடல் அட்டைகளை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு இருந்தபோது, பட்டணம் காத்தான் புறவழிச் சாலைப் பகுதியில் கேணிக்கரைப் பொலிஸார் இருவரை சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்ததில் அவர்களில் ஒருவர் தப்பியோடினார்.

மற்றைய நபர் கைதுசெய்யப்பட்டு தீவிர விசாரணைக்குட்படுத்தப்பட்டபோது இலங்கைக்குப் படகு மூலம் கடல் அட்டைகள் கடத்தப்பட இருந்தமை தெரியவந்தது.

அவரிடம் இருந்த சுமார் 3 கோடி ரூபா மதிப்பிலான 200 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

Leave A Reply

Your email address will not be published.