பார்ட்டி சென்று வீடு திரும்பிய பள்ளி மாணவி.. காரில் வைத்து கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த மாணவர்கள்

பார்ட்டிக்கு சென்று வீடு திரும்பிய பள்ளி மாணவியை, காரில் வைத்து மாணவர்கள் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த கொடூர சம்பவம் ஹைதராபாத்தில் அரங்கேறியுள்ளது.

இது தொடர்பாக காவல்துறை தரப்பு கூறியதாவது, தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வசிக்கும் 17 வயது பள்ளி மாணவி மே 28ஆம் தேதி பப்பில் நடைபெற்ற பார்ட்டி ஒன்றில் பங்கேற்றார். இந்த பார்டியில் பங்கேற்ற பின் வீடு திரும்பி கொண்டிருந்த மாணவிக்கு லிப்ட் தருவதாகக் கூறி சில இளைஞர்கள் காரில் ஏற்றியுள்ளனர். இந்த காரில் ஜூப்ளி ஹில்ஸ் பகுதிக்கு சென்ற இவர்கள் காரிலேயே மாணவியை கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கியுள்ளனர்.

பாதிப்புக்குள்ளான மாணவி வீடு திரும்பியது அவரது தந்தை மாணவியின் கழுத்து பகுதியில் ஏற்பட்ட காயம் குறித்து விசாரித்துள்ளார். முதலில் தனக்கு நேர்ந்த அவலம் குறித்து சொல்லத் தயங்கிய மாணவி பின்னர் நடந்ததை கூறியுள்ளார். இதை அடுத்து பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை காவல்துறையிடம் புகார் அளித்து வழக்கு பதிவு செய்துள்ளார். மாணவி கூறிய அடையாளத்தை வைத்து சம்பந்தப்பட்ட மெர்சீடஸ் பென்ஸ் காரை காவல்துறை பறிமுதல் செய்துள்ளது.

அத்துடன் குற்றத்தில் ஈடுபட்ட நபர்கள் குறித்து சம்பந்தப்பட்ட பப் மற்றும் அருகே உள்ள பகுதிகளில் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. மேலும் சிசிடிவி கேமராக்களையும் காவல்துறை ஆய்வு செய்து துப்பு திரட்டி வருகிறது. இந்த குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் 11, 12ஆம் வகுப்பு படிக்கும் சிறார்கள் எனவும் அங்குள்ள முன்னணி கட்சி எம்எல்ஏவின் மகனும் இந்த குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளார் என தகவல் கூறப்படுகிறது. குற்றத்தில் ஈடுபட்ட அனைவரும் செல்வாக்கு மிக்க குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் விசாரணை முறையாக நடைபெறாமல் இழுத்தடிக்கப்படுவதாக தெலங்கானா மாநில பாஜக குற்றஞ்சாட்டி வருகிறது. முறையான விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் மீது துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெலங்கானா மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய் குமார் ட்வீடரில் வலியுறுத்தியுள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவிக்கு தற்போது மருத்துவ பரிசோதனை நடைபெறுகிறது. இந்நிலையில், சம்பவத்தில் ஈடுபட்ட ஐந்து பேரை காவல்துறை கைது செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.