பவன் கல்யாண் படத்திலிருந்து வெளியேறிய பூஜா ஹெக்டே

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் பூஜா ஹெக்டேவிற்கு கடந்த இரண்டு மாதங்களுக்குள்ளாகவே பீஸ்ட், ராதே ஷ்யாம், ஆச்சார்யா மற்றும் எப்-3(ஒரு பாடல் மட்டும்) ஆகிய படங்கள் வெளியாகிவிட்டன. இதுதவிர தற்போது ஹிந்தியில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கிலும், தமிழிலும் முன்னணி இயக்குனர்கள் மற்றும் ஹீரோக்களின் சாய்ஸாக முதலிடத்தில் இருக்கிறார் பூஜா ஹெக்டே.

இந்த நிலையில் தற்போது தெலுங்கில் ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் பவன் கல்யாண் நடிப்பில் உருவாக உள்ள பாவாடியுடே பகத்சிங் என்கிற படத்தில் பூஜா ஹெக்டே தான் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார் என்று சொல்லப்பட்டு வந்தது. அதற்கு காரணம் ஹரிஷ் சங்கர் கடைசியாக இயக்கிய துவ்வாட ஜெகநாதம் மற்றும் கத்தலகொண்டா கணேஷ் ஆகிய இரண்டு படங்களிலும் தொடர்ந்து பூஜா ஹெக்டே தான் கதாநாயகியாக நடித்தார். அதனால் இந்த படத்திலும் பூஜா கிட்டே தான் கதாநாயகி என்பது கிட்டத்தட்ட உறுதியாகி இருந்தது.

இந்த நிலையில்தான் பூஜா ஹெக்டே இந்த படத்தில் இருந்து வெளியேறி உள்ளார் என்கிற தகவல் கசிந்துள்ளது. காரணம் தற்போது தமிழ் மற்றும் ஹிந்தியில் அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் தொடர்ந்து வருவதாலும் பவன் கல்யாண் படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கு தாமதமாகிக் கொண்டே செல்வதாலும் பூஜா ஹெக்டே இந்த முடிவை எடுத்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. பவன் கல்யாண் தற்போது கிரிஷ் இயக்கத்தில் ஹரிஹர வீரமல்லு என்கிற படத்தில் நடித்து வருகிறார். அதை முடித்துவிட்டு தான் ஹரிஷ் சங்கர் படத்திற்கு வருவார் என்று தெரிகிறது.

Leave A Reply

Your email address will not be published.