மேகதாது அணை: தமிழக அரசுக்கு பாஜக துணை நிற்கும் – அண்ணாமலை

மேகதாது அணைக்கு எதிரான தமிழக அரசின் நிலைப்பாட்டுக்கு, பாஜக துணை நிற்கும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவை காந்திபுரத்தில் உள்ள பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, அதிமுகவுடன் எதிர்கட்சிக்கு போட்டி போடும் மனப்பான்மை பாஜகவிற்கு கிடையாது எனவும், தங்கள் கட்சியை வளர்க்கவே தாங்கள் பாடுபடுகின்றோம் எனவும் தெரிவித்தார். நீட், தேசிய கல்விக்கொள்கை உள்ளிட்ட விவகாரங்களில் தமிழகத்தில் கருத்தியல் ரீதியாக பிரதான கட்சிகள் ஒரு பக்கமும், பாஜக தனித்து நிற்பதாகவும் கூறினார்.

இருந்த போதும், மேகதாது அணை தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாட்டுக்கு பாஜக உறுதுணையாக இருக்கும் என்று அண்ணாமலை தெரிவித்தார்.தொடர்ந்து பேசிய அண்ணாமலை, தமிழகத்தில் துறை செயலாளர்களை மாற்றுவதால் எந்தப் பலனும் இல்லை எனவும், அமைச்சர்களை மாற்றினால் ஏதாவது பலன் கிடைக்கும் என்றும் கூறினார்.

மேலும், மின்துறை குறித்து தான் பொய்யான தகவலை சொல்வதாக கூறும் அமைச்சர் செந்தில் பாலாஜி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் அதை சந்திக்க தயார் எனவும் தெரிவித்தார். அத்துடன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் எப்படி இருக்க கூடாதோ அப்படி இருக்கிறார் என்று அன்பில் மகேஷ் குறித்து, அண்ணாமலை விமர்சனம் செய்தார்.

காவல்துறை மீது பொதுமக்கள் அச்சமாக இருப்பதாக தெரிவித்த அண்ணாமலை, ‘ சாத்தான்குளம் காவல் மரணம் தொடர்பான விவகாரத்தை அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் அரசியல் நிகழ்வாக மாற்றினார். ஆனால், தற்போது லாக் அப் மரணம் என்பது தொடர்ச்சியாக நடைபெறுகிறது. இது குறித்து காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதுவும் பேசாமல் இருப்பது ஏன்? என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பினார். திமுகவின் அரசியல் தலையீட்டை சரி செய்தாலே பாதி பிரச்சனை சரியாகி விடும் எனவும் அவர் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.