மனைவியின் கழுத்தை நெரித்துக் கொலைசெய்த கணவன் பொலிஸில் சரணடைவு!

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் தனது 20 வயதுடைய மனைவியின் கழுத்தை நெரித்து அவரைக் கொலை செய்துவிட்டு கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் கணவன் சரணடைந்துள்ள சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

மகிழடித்தீவு – காளிகோவில் வீதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தயாரான 20 வயதுடைய சிவலிங்கம் கஜேந்தினி என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார் என்று கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள மகிழடித்தீவு – காளிகோவில் வீதியிலுள்ள குறித்த இளம் குடும்பமான கணவன் – மனைவி இடையே ஏற்பட்டுள்ள சந்தேகத்தால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

சம்பவ தினமான இன்று அதிகாலை 4 மணிக்கு தனது மனைவியின் கழுத்தை நெரித்து அவரைக் கொலை செய்துவிட்டு தனது இரண்டரை வயதுக் குழந்தையைத் தூக்கி கொண்டு தனது சகோதரியின் வீட்டுக்குக் கொண்டு சென்று ஒப்படைத்துவிட்டு கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் நண்பகல் 12 மணியளவில் சரணடைந்த கணவனைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனார்.

கைதான 30 வயதுடைய நபரை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனப் பொலிஸார் கூறினர்.

கொலைசெய்யப்பட்ட பெண்ணின் சடலத்தின் மீது பிரேத பரிசோதனை மேற்கொள்ள நீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டுள்ளது எனவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.