குழந்தைக்கு விஷம் வைத்து கொலைசெய்த கொடூர தாய்.

கணவன் தொழில் தேடிச் சென்ற வேளையில் மனைவி தனது 9 மாதக் குழந்தைக்கு விஷம் வைத்து கொலைசெய்துள்ள சம்பவம் மாத்தறை மாவட்டத்தில் மாலிம்படை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த குழந்தை கந்தஹேன, அல்கிரிய, தெலிஜ்ஜவில பகுதியைச் சேர்ந்த வீரதுங்க ஆராச்சிகே பசிது பிரபாத் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவத்தின்போது, வீட்டில் இருந்த குழந்தையும், 3 வயது குழந்தையும் அழும் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் வசிக்கும் பாட்டி வந்து பார்த்தபோதுதான் இந்தக் கொடூரம் பற்றிய தகவல் தெரியவந்தது.

இதன்போது, குறித்த குழந்தை ஓட்டோவில் அக்குரஸ்ஸ அரச வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், 9 மாதக் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

குழந்தைக்கு விஷம் கலந்த ஏதேனும் கொடுத்துவிட்டு தாய் தப்பிச் சென்றிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மேலும், தனது மூத்த குழந்தை மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளார் எனவும், தான் செய்த குற்றத்துக்கு மன்னிப்புக் கிடையாது எனவும் அந்தப் பெண் எழுதி வைத்திருந்த கடிதமொன்றையும் பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.

22 வயதுடைய குறித்த பெண்ணைக் கைதுசெய்ய பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இறந்த குழந்தையின் மரணம் குறித்து மரண விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

நீதிவானின் உத்தரவின் பேரில் மரணத்துக்கான சரியான காரணத்தைக் கண்டறிய பிரேத பரிசோதனை நடத்தப்படும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.