நீர்கொழும்பில் கோர விபத்து! – தந்தையும் மகனும் பரிதாபப் பலி.

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் நீர்கொழும்பு – பெரியமுல்ல பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.

புத்தளம், நூர்நகர் பகுதியைச் சேர்ந்த 57 வயதான முஹம்மது சமூன் மற்றும் அவரது 12 வயதான மகன் முஹம்மது ஹமாஸ் ஆகிய இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று நள்ளிரவு புத்தளத்திலிருந்து கொழும்பை நோக்கி வந்த ஓட்டோ ஒன்றும், கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற தனியார் பயணிகள் சேவை பஸ் ஒன்றும் மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது ஓட்டோவைச் செலுத்திச் சென்ற தந்தையும், பின்னால் இருந்து பயணம் செய்த 12 வயதுடைய மகனும் படுகாயமரடைந்த நிலையில், அங்கிருந்தவர்களால் நீர்கொழும்பு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும், ஓட்டோவைச் செலுத்திச் சென்ற தந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், ஓட்டோவின் பின்னால் இருந்து பயணம் செய்த 12 வயதான மகன் ஆபத்தான நிலையில் நீர்கொழும்பு வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட போதிலும், இன்று காலை அந்தச் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த தந்தை மற்றும் மகன் ஆகியோரது ஜனாஸாக்கள் பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.

பிரேத பரிசோதனையின் பின்னர் ஜனாஸாக்கள், உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளன என்று பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த விபத்தில் குறித்த ஓட்டோவின் முன் பக்கம் முழுமையாகச் சேதமடைந்துள்ளது.

விபத்துடன் தொடர்புடைய தனியார் பஸ்ஸின் சாரதி , விபத்தை ஏற்படுத்திவிட்டு அவ்விடத்தில் இருந்து தப்பிச் சென்று பொலிஸில் சரணடைந்த நிலையில் அவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

விபத்துச் சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகைள மேற்கொண்டு வருகின்றனர்.

விற்பனை செய்யும் நோக்கில் ஒரு தொகை மரவெள்ளிக் கிழங்குகளை ஓட்டோவில் ஏற்றிக்கொண்டு புத்தளத்திலிருந்து கொழும்பு நோக்கி வந்தபோதே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மேற்படி இருவரும் விபத்தில் சிக்கிப் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.