லொறியில் இருந்து வீழ்ந்து குடும்பஸ்தர் ஒருவர் மரணம்.

புத்தளம், மாதம்பை – கச்சக்கடு பகுதியில் லொறியில் இருந்து கீழே வீழ்ந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கல்முறுவ, கச்சக்கடுவ பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த நபருக்கும், லொறியின் சாரதிக்கும் இடையே நேற்றுக் கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்ந நபரின் வீட்டுக்கு முன்பாக இந்த வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முடிவடைந்த பின்னர் குறித்த லொறியின் சாரதி, கோபத்துடன் அங்கிருந்து செல்ல முற்பட்டபோது உயிரிழந்த நபர் அந்த லொறியின் பின்பகுதியைப் பிடித்துக்கொண்டு ஏற முற்பட்டுள்ளார் எனக் கூறப்படுகின்றது.

இதன்போது, குறித்த லொறி அவ்விடத்தில் இருந்து புறப்பட்டு சுமார் 100 மீற்றர் தூரத்தில் லொறியின் பின்பக்கம் இருந்த நபர் கீழே வீழ்ந்துள்ளார் என மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது எனப் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதன்போது, கீழே வீழ்ந்து படுகாயமடைந்த நபரை அங்கிருந்தவர்கள் உடனடியாகக் கல்முறுவ வைத்தியசாலையில் சேர்த்த போதிலும் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனப் பொலிஸார் கூறினர்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மாதம்பைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.