தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு ரூ.67 கோடி மதிப்பு அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பிவைப்பு

பொருளாதார சிக்கலில் சிக்கி தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக, தமிழக அரசு சார்பில் 2-ம் கட்டமாக ரூ.67.70 கோடி மதிப்பிலான 15 ஆயிரம் டன் எடை கொண்ட அரிசி, பால் பவுடர் மற்றும் அத்தியாவசிய மருந்து பொருட்கள் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலம் நேற்று அனுப்பி வைக்கப்பட்டன.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு அங்குள்ள மக்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தில் இருந்து ரூ.80 கோடி மதிப்பில் 40,000 டன் அரிசி, ரூ.28 கோடி மதிப்பிலான உயிர்காக்கும் மருந்து பொருட்கள் மற்றும் ரூ.15 கோடி மதிப்பிலான 500 டன் பால் பவுடர் ஆகிய அத்யாவசியப் பொருட்கள் தமிழகத்தில் இருந்து அனுப்பப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி சென்னை துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலம் கடந்த 18.5.2022 அன்று முதல் கட்டமாக ரூ.30 கோடி மதிப்பிலான 9,045 டன் அரிசி, ரூ.1.5 கோடி மதிப்பிலான 50 டன் ஆவின் பால் பவுடர், ரூ. 1.44 கோடி மதிப்பிலான 8 டன் அத்தியாவசிய மருந்து பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அந்த கப்பலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

இதன் தொடர்ச்சியாக 2-ம் கட்டமாக நேற்று தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. ‘விடிசி சன்’ என்ற சரக்கு கப்பலில் ரூ.48.30 கோடி மதிப்பிலான 14,712 டன் அரிசி, ரூ.7.50 கோடி மதிப்பிலான 250 டன் ஆவின் பால் பவுடர், ரூ.11.90 கோடி மதிப்பிலான 38 டன் உயிர்காக்கும் அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் என மொத்தம் ரூ.67.70 கோடி மதிப்பிலான 15 ஆயிரம் டன் எடையுள்ள பொருட்கள் அனுப்பப்பட்டன.

புறப்பட தயாராக இருந்த `விடிசி சன்’ என்ற சரக்கு கப்பல்.படங்கள்: என்.ராஜேஷ்
தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், உணவு துறை அமைச்சர் அர.சக்கரபாணி, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும்கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் அத்தியாவசிய பொருட்கள் ஏற்றப்பட்ட கப்பலை கொடியசைத்து அனுப்பி வைத்தனர்.

நிகழ்ச்சியில் அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ், மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், வஉசி துறைமுக ஆணையத் தலைவர் தா.கி.ராமச்சந்திரன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, சட்டப் பேரவை உறுப்பினர்கள் ஜி.வி. மார்க்கண்டேயன், எம்.சி.சண்முகையா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

முதல்வர் ட்விட்டர் பதிவு

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘‘இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் இன்னலுறும் மக்களுக்கு தமிழக மக்களின் சார்பாக ரூ.67.70 கோடி மதிப்பிலான அத்தியாவசியப் பொருட்கள், தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து2-ம் கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டது. அன்பின் வழியது உயிர்நிலை என்று மனிதம் போற்றுவோம்’’ என தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.