சென்னை பிராட்வே பகுதி ஆக்கிரமிப்புகள்- சிசிடிவி காட்சிகளுடன் அறிக்கைத் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை பிராட்வே பகுதி நடைபாதைகளிலிருந்து அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள் மீண்டும் முளைக்காதவாறு அதிரடி சோதனை நடத்தி, சிசிடிவி கேமரா பதிவுகளுடன் சென்னை மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை பிரட்வே பகுதியில் அமைந்துள்ள என்.எஸ்.சி போஸ் சாலையில் உள்ள நடைபாதையை வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளதாக கூறி, மறைந்த டிராபிக் ராமசாமி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென்ற உத்தரவை அமல்படுத்தவில்லை என்று 2016ஆம் ஆண்டில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்றிடம் வழங்க அவகாசம் வழங்கியிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனிஷ்வர்நாத் பண்டாரி மற்றும் என்.மாலா அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில், தற்போது வரை நடைபாதை அக்கிரமிப்புகள் அகற்றபடவில்லை என கூறி, அதற்கான புகைப்படங்களை தாக்கல் செய்தார்.

சென்னை மாநகராட்சி தரப்பில் அக்கிரமிப்புகள் அகற்றபட்டு வருவதாக விளக்கம் அளிக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் வரும் திங்கட்கிழமை முதல் அடுத்த ஞாயிற்றுகிழமை வரை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி எந்த ஆக்கிரமிப்புகளும் இல்லை என்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றும், அந்த 7 நாட்களுக்கான சிசிடிவி பதிவுகளை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். மேலும் அதுதொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 4ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.