அனைத்து அலுவலர்களும் நாளை முதல் கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும் – தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று 20,227 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், சென்னையில் 345, செங்கல்பட்டில் 126, கோவையில் 55 உள்பட மொத்தம் 771 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதன்படி, தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,63,068ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 419 ஆக அதிகரித்துள்ளது. பெண்களின் எண்ணிக்கை 352 ஆக உள்ளது. மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 38 ஆக உள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 4,366 ல் இருந்து 4,678ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், பொதுத்துறை அரசு துணைச் செயலாளர் எஸ்.அனு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தில் புதிய வகை கோவிட் 19 தொற்று கண்டறியப்பட்டுள்ளதாலும், சில மாவட்டங்களில் இதன் தொற்று குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருவதாலும், நோய்த் தொற்றின் தாக்கல்திலிருந்து பாதுகாப்பாக இருப்பது அவசியம் என்பதாலும், அனைத்து அலுவலர்களும் 24-6-2022 (நாளை) முதல் கட்டாயமாக முக்ககவசம் (Face Mask) அணிந்து அலுவலகத்திற்கு வருமாறும் சுத்தம் மற்றும் சுகாதாரத்துடன் (Respiratory hygiene and use of hand sanitizers in the Office premises) இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா பாதிப்பு நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இன்று டெல்லியில் அவசர ஆலோசனை கூட்டம் ஒன்றை கூட்டியுள்ளார். இந்த கூட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் டாக்டர் பலராம் பார்கவா, தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் இயக்குனர் சுஜீத் சிங் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண், உயிரிதொழில்நுட்பத்துறை செயலாளர் ராஜேஷ் கோகலே, மருந்து துறை செயலாளர் அபர்ணா உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்.

இதில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் மீண்டும் வருவதால் அதனைத் தடுப்பதற்கான உத்தி முறைகள் வகுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.