தனியார் பஸ் சேவைகள் நாளை முதல் முடங்கும்?

நாளை முதல் நாடு முழுவதும் தனியார் பஸ் சேவைகளை முழுமையாக நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது என அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன ஊடகங்களிடம் தெரிவித்தார்.

பொதுப் போக்குவரத்துச் சேவையை தொடர்ந்து கொண்டு செல்லும் நோக்கில் தனியார் பஸ்களுக்கு இலங்கை போக்குவரத்துச் சபையின் பஸ் சாலைகளில் எரிபொருளை வழங்குமாறு அரசு இதற்கு முன்னர் அறிவுறுத்தியது.

எனினும், இலங்கை போக்குவரத்துச் சபையின் சில பிரதேச பஸ் சாலைகளில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் எரிபொருள் வழங்கப்படுவதோடு சில இடங்களில் எரிபொருள் வழங்க மறுக்கப்படுகின்றது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கூறினார்.

எனினும், முழுமையான அளவில் இலங்கை போக்குவரத்துச் சபையின் பஸ்களைச் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சகல ரயில் சேவைகளுக்குமான எரிபொருள் கையிருப்பில் உள்ளது என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.