சஜித் – ரெலோ நேரில் முக்கிய சந்திப்பு.

எதிர்க்கட்சித் தலைவருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான அங்கத்துவக் கட்சியான ரெலோவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பு நடைபெற்றது.

எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் புத்திக பத்திரண ஆகியோரும், ரெலோ சார்வில் அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், செயலாளர் நாயகம் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) மற்றும் தேசிய அமைப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான குருசுவாமி சுரேந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கு மேல் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் நாட்டில் எழுந்திருக்கும் தற்போதைய கடுமையான பொருளாதாரச் சிக்கல், அரசியல் சூழ்நிலை, அரசியல் மாற்றத்துக்கான முயற்சிகள், தமிழ் மக்கள் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகள், அரசமைப்பு விடயங்கள், நாட்டின் நிரந்தர மீட்சிக்கு அரசியல் தீர்வின் முக்கியத்துவம், தொல்லியல் நடவடிக்கைகளால் ஏற்படும் இன முரண்பாடு என முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

Leave A Reply

Your email address will not be published.