தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முனைக்காடு பிரதேசத்தில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஐந்து பிள்ளைகளின் தந்தையான கோபாலபிள்ளை புவனேசசிங்கம் (வயது 47) என்பவரே குடிசை வீட்டின் அறையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று வீட்டில் குடும்பத் தகராறு ஏற்பட்ட பின்னர் அவர் தனது வீட்டு வளாகத்தில் உள்ள மற்றுமொரு குடிசை வீட்டுக்குச் சென்றார் என்றும், அங்கு அவர் தூக்கிட்டு தொங்கிய நிலையில் மறுநாளான இன்று சடலமாக மீட்கப்பட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிவான் பீற்றர் போலின் உத்தரவுக்கமைவாக சம்பவ இடத்துக்குச் சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தைப் பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டார்.

மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.