கோவாவில் காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பம்.. 5 எம்எல்ஏக்கள் போர்க்கொடி.. எதிர்க்கட்சி தலைவரின் பதவி பறிப்பு

மகாராஷ்டிரா அரசியல் களத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்னர் தான் புயல் ஒன்று அடித்து ஓய்ந்த நிலையில், அதன் அண்டை மாநிலமான கோவாவில் புதிய புயல் உருவாகியுள்ளது.

மகாராஷ்டிராவில் அம்மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த உத்தவ் தாக்ரேவுக்கு எதிராக சிவசேனா கட்சி எம்எல்ஏக்கள் பெரும்பாலானோர் போர்க்கொடி தூக்கி, பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைத்துள்ளனர். இதை அடுத்து உத்தவ் தலைமையிலான சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மகாவிகாஸ் அகாதி கூட்டணி ஆட்சி வீழ்ந்து, பாஜக ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மகாராஷ்டிராவின் அண்டை மாநிலமான கோவாவிலும் புதிய அரசியல் நகர்வுகள் ஏற்பட்டுள்ளன. அங்கு முதலமைச்சர் பிரமோத் சாவந்த் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. சுமார் 11 எம்எல்ஏக்களுடன் காங்கிரஸ் எதிர்க்கட்சியாக உள்ளது. எதிர்க்கட்சி தலைவராக காங்கிரஸ் கட்சியின் மைக்கேல் லோபோ பதவி வகித்து வந்தார். இந்நிலையில், மைக்கேல் லோபா தலைமையில் 5 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்சியில் இருந்து வெளியேற உள்ளதாக இரு நாள்களாக தகவல் வெளியாகியுள்ளது. மைக்கெல் லோபோ, திகம்பர் காமத், கேதர் நாயக், ராஜேஷ் பல்தேசாய், தேலியாலா ஆகிய ஐந்து எம்எல்ஏக்களும் கட்சி தொடர்பில் இருந்து வெளியே உள்ளதாக மாநில காங்கிரஸ் தெரிவித்தது.

மேலும், கோவா காங்கிரஸ் பொறுப்பாளரான தினேஷ் குண்டு ராவ், மைக்கெல் லோபோ, திகம்பர் காமத் ஆகியோர் காங்கிரஸ் கட்சியை உடைத்து பாஜகவுக்கு ஆதரவான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக புகார் தெரிவித்துள்ளார். இந்த நகர்வுகளைத் தொடர்ந்து மைக்கெல் லோபோவின் எதிர்க்கட்சி தலைவர் பதவியை காங்கிரஸ் கட்சி பறித்துள்ளது. மேலும், மைக்கெல் லோபோ மற்றும் திகம்பர் காமத் ஆகியோரின் எம்எல்ஏ பதவிகளை கட்சி தாவல் தடுப்பு சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய கோவா காங்கிரஸ் சபாநாயகரிடம் மனு அளித்துள்ளது. அதேவேளை, மைக்கெல் லோபோ மற்றும் திகம்பர் காமத் ஆகியோர் தாங்கள் கட்சியில் தான் இருக்கிறோம், எந்த குழப்பத்தையும் செய்யவில்லை என விளக்கமளித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.