சிங்கப்பூரை விட்டு 15 நாட்களுக்குள் வெளியேறுங்கள்! கோட்டாவிடம் அந்நாட்டு அரசு நேரில் கோரிக்கை;

“இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தொடர்ந்து சிங்கப்பூரில் தங்கியிருப்பதால் பாதுகாப்புச் சிக்கல்கள் ஏற்படலாம். எனவே, அவர் 15 நாட்களுக்குள் சிங்கப்பூரை விட்டு வெளியேற வேண்டும்.”

இவ்வாறு சிங்கப்பூர் அரசு, கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

சிங்கப்பூர் அரசின் இந்தக் கோரிக்கையை அந்நாட்டு அமைச்சர் காசி விஸ்வநாதன் சண்முகம், கோட்டாபய ராஜபக்சவிடம் நேரில் தெரிவித்துள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் மக்கள் எதிர்ப்புப் போராட்டத்தின் காரணமாகக் கடந்த 13ஆம் திகதி அதிகாலை மாலைதீவுக்குத் தப்பிச் சென்றிருந்த கோட்டபாய ராஜபக்ச, பின்னர் அங்கிருந்து மறுநாள் 14ஆம் திகதி மாலை சிங்கப்பூருக்குச் சென்றார். அங்கு அவர் தனது நண்பர் ஒருவருக்குச் சொந்தமான வீட்டில் தங்கியிருக்கின்றார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், கோட்டாபய ராஜபக்சவை நேற்றுச் சந்தித்த சிங்கப்பூர் அமைச்சர் காசி விஸ்வநாதன் சண்முகம், சிங்கப்பூர் அரசால் இனிப் பாதுகாப்பு அளிக்க முடியாது எனவும், நாட்டை விட்டு 15 நாட்களுக்குள் வெளியேறும்படி கோரிக்கை விடுத்தார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, சிங்கப்பூரிலிருந்து இந்தியாவுக்கு வருவதற்கு இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விடுத்த கோரிக்கையை ஏற்க இந்திய அரசு மறுத்துவிட்டது என இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.