இனப்படுகொலையாளியான கோட்டாபயவை சர்வதேச நீதிமன்றிடம் கையளிக்க வேண்டும்!

சிங்கப்பூரில் தற்போது நிலைகொண்டுள்ள இலங்கையின் முன்னாள் முன்னாள் ஜனாதிபதியும் தமிழனப் படுகொலையாளியுமான கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக மலேசியத் தமிழர்கள் அணிதிரண்டு குரல் எழுப்பினர்.

தலைநகர் கோலாலபம்பூரில் உள்ள சிங்கப்பூர் தூதரகத்தின் முன் பினாங்கு மாநில் துணை முதல்வரும் நாடுகடந்த தமிழீழ அரசின் மதியுரைஞர் குழுப் பிரதிநிதியுமாகிய பேரா.இராமசாமி தலைமையில் அணிதிரண்ட தமிழர்கள், இனப்படுகொலையாளியைச் சிங்கப்பூர் வெளியேற்றி சர்வதேச நீதிமன்றிடம் கையளிக்க வேண்டும் என்ற முழக்கத்தை எழுப்பினர்.

மலேசியத் தமிழர் அரசியல் பிரதிநிதிகளான சதீஸ் முனியாண்டி, டேவிட் மர்செல் உட்பட பல தமிழர் அமைப்பினர் இதில் பங்கெடுத்திருந்தனர்.

மலேசியாவுக்கான சிங்கப்பூர் தூதுவரைச் சந்தித்துக் கோரிக்கை மனுவைக் கையளித்து, தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து சிங்கப்பூரில் இருந்து வெளியேற்றப்பட்டு சர்வதேச நீதிமன்றிடம் இனப்படுகொலையாளியான கோட்டாபயவைக் கையளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் முன்வைத்தனர்.

சர்வதேச நியாயாதிக்கத்தின் கீழ் கோட்டாபய ராஜபக்சவைக் கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு நாடு கடந்த தமிழீழ அரசு தொடர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளது.

போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இலங்கையின் அரசியல், இராணுவத் தலைவர்களுக்கு எதிராக ஐ.நா. உறுப்பு நாடுகள், சர்வதேச நியாயாதிக்கத்தின் கீழ் சட்ட நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் மிச்சல் பச்லெட் அம்மையார் முன்னர் வலியுறுத்தியிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.