இன்னும் ஒராண்டிற்கு வீட்டில் இருந்தே பணியாற்றலாம்.. Work From Homeக்கான புதிய விதிகளை வெளியிட்ட வர்த்தக அமைச்சகம்!

இந்தியாவில் உள்ள சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் (Special Economic zone) ஓராண்டிற்கு வீட்டிலிருந்த படியே ஊழியர்கள் பணியாற்றுவதற்கு அனுமதி அளிக்கப்படுவதாகவும், ஒப்பந்த ஊழியர்கள் உட்பட மொத்த ஊழியர்களில் அதிகபட்சம் 50 சதவீத ஊழியர்கள் தேவைப்பட்டால் மேலும் ஓராண்டை நீட்டிப்பு செய்துக்கொள்ளலாம் என Work From Homeக்கான புதிய விதிமுறைகளை மத்திய வர்த்தத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

உலகம் முழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கிய கொரோனா தொற்றின் தாக்கம் இன்னும் நின்றபாடில்லை. இதனைக்கட்டுக்குள் கொண்டுவரும் விதமாக ஆரம்பக்கட்டத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இருந்த போதும் பள்ளிகள், ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்றுவதற்கு அனுமதி அளித்தது. கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக ஐடி நிறுவன ஊழியர்கள் இன்னும் Work From Homeல் தான் பணிபுரிகின்றனர் .

தற்போது கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்து படிப்படியாக இயல்பு நிலைக்கு மீண்டு வரும் வேளையில், பல ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வாரத்திற்கு 2 முறை அலுவலகம் வரவும் மற்ற நாள்களில் வீட்டில் இருந்து பணியாற்றும் ஹைப்ரிட் முறையைப்பின்பற்ற வலியுறுத்தியது. இந்த சூழலில் தான், கடந்த ஜனவரி மாதம் வெளியான ஆய்வு முடிவில், 82 சதவீத ஊழியர்கள் அலுவலகத்திற்கு செல்வதை விட வீட்டிலிருந்து வேலை செய்வதை விரும்புகின்றனர் என தெரியவந்தது.

இதனையடுத்து தான், நாடு முழுவதும் உள்ள அனைத்து சிறப்புப் பொருளாதாரா மண்டலங்களிலும் (SEZs) ஒரே மாதிரியான work form home கொள்கையைக் கடைப்பிடிக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென்று தொழில்துறையினர் கோரிக்கைகளை முன்வைத்தனர். இதுத்தொடர்பாக , பல்வேறு பங்குதாரர்களுடன் பல சுற்று விவாதங்களை மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் நடத்திய பின்னதாக தற்போது Work From Home -க்கான 43A யை சிறப்புப் பொருளாதார மண்டல விதிகள், 2006 இல் புதிய விதிகளை அறிவித்துள்ளது.

Work From Home க்கான புதிய விதிகள்:

சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் உள்ள ஒரு யூனிட்டின் குறிப்பிட்ட வகை ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்யலாம். ஊழியர்கள் ஓராண்டிற்கு வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதிக்கப்படும் என்றும், தேவைப்படும் பட்சத்தில் சிறப்புப்பொருளாதார மண்டல மேம்பாட்டு ஆணையர் இதனை மேலும் அந்தக்காலத்தை நீட்டிப்பு செய்துக்கொள்ளலாம். குறிப்பாக மொத்த ஊழியர்களின் 50 சதவீதம் பேர் வீட்டில் இருந்தே பணியாற்றும் நடைமுறையை ஓராண்டிற்கு நீட்டித்துக்கொள்ளலாம்.

தற்போது மத்திய வர்த்தகத்துறை அறிவித்துள்ள புதிய விதிகள் IT/ ITeS SEZ units, தற்காலிக ஊழியர்கள், பயணம் செய்யும் மற்றும் வெளியூர்களில் பணியாற்றும் ஊழியர்கள் இதில் அடங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை ஏற்கனவே வீட்டில் இருந்தே பணிபுரியும் SEZ யூனிட்களைப் பொறுத்தமட்டில், அனுமதி பெறுவதற்கு 90 நாள்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் சிறப்புப்பொருளாதார மண்டல விதிகளின் படி, வீட்டில் இருந்து பணியாற்றும் ஊழியர்களுக்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பான இணைய இணைப்பு ஆகிய இரண்டையும் வழங்க வேண்டும். ஒரு ஊழியருக்கு வழங்கப்பட்ட அனுமதியுடன் உபகரணங்களை வெளியே எடுப்பதற்கான அனுமதியை இணை- டெர்மினஸ் என்று மத்திய அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவில், சாண்டா குரூஸ் (மகாராஷ்டிரா), கொச்சின் (கேரளா), காண்ட்லா மற்றும் சூரத் (குஜராத்), சென்னை (தமிழ்நாடு), விசாகப்பட்டினம் (ஆந்திரப் பிரதேசம்), ஃபால்டா (மேற்கு வங்கம்) மற்றும் நொய்டா உட்பட 8 SEZகள் தற்போது செயல்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.