அவசரகாலச் சட்டம் மேலும் நீடிப்பு.

அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தில் இன்று 57 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

அவசரகாலச் சட்டத்துக்கு ஆதரவாக 120 வாக்குகளும், எதிராக 63 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பதில் ஜனாதிபதியாகச் செயற்பட்டவேளை, கடந்த ஜுலை 17 ஆம் திகதி பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவசரகால நிலைமையைப் பிரகடனப்படுத்தினார்.

அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டு, 14 நாட்களுக்குள் நாடாளுமன்றத்தின் அனுமதி பெறப்படாவிட்டால் அது இரத்தாகிவிடும். எனவே, அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பதற்கான பிரேரணையை சபை முதல்வரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த நாடாளுமன்றத்தில் இன்று முன்வைத்தார்.மாலை 5.25 மணிவரை இது தொடர்பான விவாதம் இடம்பெற்றது.

அதன்பின்னர் அவசரகாலச் சட்டத்தை நீடிப்பது தொடர்பான பிரேரணை மீது எதிரணி பிரதம கொறடாவான லக்‌ஷ்மன் கிரியெல்ல வாக்கெடுப்பைக் கோரினார். இலத்திரனியல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தேசிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்பன அவசரகாலச் சட்டத்துக்கு எதிராக வாக்களித்தன. டலஸ் அணியும் எதிராகவே வாக்களித்தது.

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியும் , அரச பங்காளிக் கட்சிகளும் ஆதரித்து வாக்களித்தன. விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார உள்ளடங்கலான சுயாதீன அணிகளும் ஆதரித்து வாக்களித்தன. இ.தொ.கா. எம்.பிக்கள் இருவரும் ஆதரித்து வாக்களித்தனர்.

ஆளும், எதிர்த்தரப்பில் இருந்து 42 எம்.பிக்கள் சபைக்கு இன்று சமூகமளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.