பென்சில், மேகி விலையை கூட உயர்த்திவிட்டீர்கள்.. பிரதமருக்கு சிறுமி கடிதம்

விலைவாசி உயர்வு தொடர்பாக உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த 1ம் வகுப்பு சிறுமி ஒருவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை வெகுவாக உயர்ந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் மத்திய அரசு மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளன. இது தொடர்பாக நாடாளுமன்றத்திலும் எதிர்க்கட்சிகள் அமலில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், சிறுமி ஒருவர் விலைவாசி உயர்வால் தான் பாதிக்கப்பட்டுள்ளது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

உத்தரப் பிரதேசம் மாநிலம், கன்னோஜ் மாவட்டத்தில் உள்ள சிப்ரமாவ் நகரைச் சேர்ந்த கிருத்தி துபே என்ற சிறுமி ஒன்றாம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், ன் பெயர் கிர்த்தி துபே, நான் 1ம் வகுப்பு படிக்கிறேன். நீங்கள் விலைவாசியை வெகுவாக உயர்த்திவிட்டீர்கள். எனது பென்சில் மற்றும் ரப்பர் (அழிப்பான்) விலை உயர்ந்துவிட்டது. மேகியின் விலையும் அதிகரித்துள்ளது. பென்சில் கேட்டால் அம்மா அடிப்பார். நான் என்ன செய்ய வேண்டும்? மற்ற மாணவர்கள் என் பென்சிலை திருடுகிறார்கள்.

கடைக்கு சென்று மேகி வாங்கலாம் என்றால் கடைக்காரர் 7 ரூபாய் கேட்கிறார். என்னிடம் 5 ரூபாய் மட்டுமே உள்ளது. இதனால் மேகி வாங்க முடியவில்லை’ என வேதனையுடன் தெரிவித்துள்ளார். இது குறித்து சிப்ரமாவ் மாவட்டத்தின் சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட் அசோக் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘ சிறுமியின் கடிதம் சமூக வலைதளங்கள் மூலம்தான் அறிந்தேன். குழந்தைக்கு எந்த வகையிலும் உதவ நான் தயாராக இருக்கிறேன்.

மேலும் அவளது கடிதம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குச் சென்றடைவதை உறுதிசெய்ய என்னால் முடிந்ததை செய்வேன்’ என தெரிவித்துள்ளார். இதனிடையே, சிறுமியின் கடிதம் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. நாடாளுமன்றத்தில் திமுக எம்பி கனிமொழி நேற்று ஆற்றிய உரையில்கூட சிறுமியின் கடிதத்தை மேற்கொள் காட்டி பேசினார்.

Leave A Reply

Your email address will not be published.