யாழ். பல்கலையில் பகிடிவதை உச்சம்: ஒரு மாத காலப் பகுதிக்குள் மட்டும் 21 மாணவர்களுக்கு வகுப்புத் தடை.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் புதுமுக மாணவர்களைப் பகிடிவதைக்கு உட்படுத்தும் சிரேஷ்ட மாணவர்களுக்கு எதிராக பல்கலைக்கழக நிர்வாகம் வகுப்புத் தடை விதித்து வருகின்றது.

கடந்த ஒரு மாத காலப் பகுதிக்குள் 19 கலைப்பீட மாணவர்கள் உள்ளிட்ட 21 பேருக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ள மாணவர்கள், தடைக் காலத்தில் பல்கலைக்கழக வளாகத்துக்குள்ளோ, மாணவர் விடுதிக்குள்ளோ உட்பிரவேசிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கலைப்பீட புதுமுக மாணவன் ஒருவரைப் பாலசிங்கம் விடுதியில் வைத்து பகிடிவதைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் சிரேஷ்ட மாணவன் ஒருவருக்கு விசாரணைகள் முடிவடையும் வரை தற்காலிக வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, விஞ்ஞானபீட புதுமுக மாணவன் ஒருவரை பல்கலைக்கழக வாயிலுக்கு அருகில் பகிடிவதைக்கு உட்படுத்தித் தாக்கிய குற்றச்சாட்டில் விஞ்ஞானபீட சிரேஷ்ட மாணவர்கள் இருவருக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கடந்த மாதம் தெல்லிப்பளை பகுதிக்குப் புதுமுக மாணவர்களை அழைத்துப் பகிடிவதைக்கு உட்படுத்தினார்கள் எனும் குற்றச்சாட்டில் கலைப்பீடத்தைச் சேர்ந்த 18 மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பகிடிவதை சம்பவங்கள் தொடர்பாக யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் பூர்வாங்க விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.