ஜூலை மாதத்தில் மட்டும் 23.87 லட்சம் இந்தியர்களின் வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கம்.. எந்த மாதத்திலும் இல்லாத அதிகபட்சம்..

இந்தியாவில் கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் சுமார் 23.87 லட்சம் வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக வாட்ஸ்ஆப் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த கணக்குகள் 2021 புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை மீறி செயல்பட்ட குற்றத்திற்காக முடக்கப்பட்டுள்ளன. முடக்கப்பட்ட 23.87 லட்சம் கணக்குகளில், 14.16 லட்சம் கணக்குகள் பயனாளர்களின் எந்தவித புகார்களும் இன்றி, நிறுவனம் தாமாகவே கண்காணித்து அதன் அடிப்படையில் தடை செய்துள்ளது. பிரச்சனை ஏற்படுத்தும் விதமாக நடவடிக்கைகள் தென்படும் பட்சத்தில் அந்த வாட்ஸ்ஆப் கணக்குகள் கண்காணிக்கப்படுகின்றன. விதிமீறல் உறுதியான பட்சத்தில் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

கடந்த ஜூன் மாதம் இதே போன்று மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் சுமார் 22 லட்சம் கணக்குகளை வாட்ஸ் ஆப் முடக்கியுள்ளது. கடந்த மே மாதத்தில் 19 லட்சம் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. மாதா மாதம் இந்த ஒழுங்கு நடவடிக்கையானது தொடர்ந்து நடைபெறுகிறது. மேலும் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த ஜூலை மாதத்தில் அதிகபட்ச கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த சில ஆண்டுகளாகவே வாட்ஸ்ஆப் தளத்தை பாதுகாப்பு கொண்டதாக மாற்ற செயற்கை நுண்ணறிவு, கலை தொழில்நுட்பம், டேட்டா சயின்ஸ் உள்ளிட்ட துறை நிபுணர்களிடம் இணைந்து பணியாற்றி வருகிறோம்.

இந்நிலையில் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அவர்களின் பின்னூட்டங்கள், புகார்களை நிறுவனம் தொடர்ந்து பரிசீலித்து வருகிறது. இதன் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கையாகவே இந்த கணக்குகள் முடக்கப்பட்டன. வாட்ஸ்ஆப்பை தவறான செயல்களை மேற்கொள்ள கருவியாக பயன்படுத்துவதை தடுக்க நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது’ எனத் தெரிவித்துள்ளது.

தகவல் தொழில்நுட்பம் 2021 சட்டப்படி, மாதாந்திர அறிக்கையை வாட்ஸ்அப் நிறுவனம் சமர்ப்பிக்க வேண்டும். முறைகேடான வாட்ஸ்அப் கணக்குகள் பற்றி எழுப்பப்படும் புகார்கள் பரிசீலனை செய்யப்பட்டு, அந்த கணக்குகள் முடக்கப்படும். வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தும் எந்த பயனாளரும், கூறப்பட்டுள்ள விதிமுறைகளை மீறினால், அவர்களின் வாட்ஸ்அப் கணக்குகள் தடை செய்யப்படும் என்பதை நிறுவனம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.