பின்தங்கிய மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரச பொறிமுறை அரசியல், இனவாத நோக்கில் செயற்படுகிறது.

பின்தங்கிய நிர்க்கதியான மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரசு பொறிமுறை மீது எனக்கு நம்பிக்கை இல்லை. நிவாரணம் பெறுவோரை தெரிவு செய்வதில் பிரதேச செயலக, கிராம சேவகர் மட்ட அரசாங்க அதிகாரிகள் அரசியல் நோக்கிலும், இனவாத நோக்கில் செயற்படுகின்றனர். உண்மையான நிர்க்கதியான மக்களுக்கு, இந்திய அரசு, தமிழக அரசு, உலக நாடுகள், ஐநா அமைப்புகள் கொடையாக வழங்கும் நிவாரணங்கள் முறையாக கிடைப்பதில்லை. எனவே நிவாரண நன்கொடைகள் நேரடியாக நிர்க்கதியான மக்களை சென்று அடைவதை உறுதிப்படுத்த அவற்றை சிவில் அமைப்புகள் மூலமாக சர்வதேச சமூகம் வழங்க வேண்டும். அவை கண்காணிக்கப்பட வேண்டும். நிவாரணம் பெறுகின்றவர்கள் யார் என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மனோ எம்பி மேலும் கூறியதாவது,

ஜனாதிபதி முன்வைத்த இடைக்கால பாதீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள யோசனைகள் நடைமுறை சாத்தியம் அற்றவை. கணிசமான யோசனைகளுக்கு நிதி ஒதுக்கீடுகள் இல்லை. துண்டு விழும் தொகையை ஒருபோதும் நிதியமைச்சர் ஜனாதிபதியால் சரி செய்ய முடியாது. ஏற்கனவே அரச கஜானா காலி. ஆகவே எங்கே இருந்து நிதி வரப்போகிறது என்று கேட்க விரும்புகிறேன்.

இதனால்தான் நான் வரவு செலவு திட்ட விவாதத்தில் உரையாற்றிய போது, எனது அக்கறை, அவதானம் ஆகியன ஆக, பின்தங்கிய நிர்க்கதியான மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் மாத்திரம் இருக்கிறது என கூறினேன். அதிலும், பின்தங்கிய மக்கள் யார் என்பதை அறிவதில் அதிக கண்காணிப்பு வேண்டும் என கூறினேன்.

ஏற்கனவே, சமுர்த்தி மற்றும் பின்தங்கியோர் பட்டியலில் இருக்கின்ற பெயர்கள் தொடர்பில் எனக்கு திருப்தி இல்லை. அங்கே நிவாரணம் பெற தகைமையற்ற வசதியானோர் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. அதேபோல் அங்கே நிவாரணம் பெற வேண்டிய நிர்க்கதியான மக்களின் பெயர்கள் இடம்பெறவில்லை. இதை நான் பொறுப்புடன் கூறுகிறேன்.

இதற்கு காரணம் அரசியல்வாதிகள் தங்கள் ஆதரவாளர் பெயர்களை அங்கே திணித்துள்ளார்கள். எனது தொகுதி கொழும்பில் வாழும் “ஹர்பன் புவர்” என்ற நகர பாமரர்களின் பெயர்கள் முறையாக அங்கே இல்லை. குறிப்பாக சொந்த வீட்டில் வாழவில்லை என்ற காரணத்தால் பலரது பெயர்கள் இடம்பெறவில்லை. இது எப்படி? சொந்த வீடு இல்லாத வாடகை வீட்டில் வசிக்கும் ஏழைகள் மண்ணை சாப்பிட்டு, தண்ணீர் குடிக்க வேண்டுமா? அடையாள அட்டையை பார்த்து கஷ்டப்படும் எல்லோருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.

அரசியல் காரணமாகவும், தமிழர்கள் என்ற காரணத்தாலும், பாரபட்சமாக நமது மக்கள் நடத்தபடுவதை நான் இலங்கைக்கு உதவும் உலக சமூகத்துக்கு சொல்லி வருகிறேன். இன்னமும் சொல்வேன்.

அடுத்தது, பெருந்தோட்டங்களில் வாழும் பாமர மக்கள். உழைக்கும் மக்கள். இன்று கோதுமை, பாண், மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலையேற்றத்தால் விழி பிதுங்கி போயிருக்கும் பிரிவினர். நாட்சம்பள தொகையை 25 ஆல் பெருக்கி மாதம் இவ்வளவு சம்பளம் எனக்கூறி அவர்களை சமுர்த்தி மற்றும் பின்தங்கியோர் பட்டியலில், பிரதேச செயலக, கிராம சேவகர் மட்ட அரசாங்க அதிகாரிகள் சேர்ப்பதில்லை. இந்த மாத சம்பளம், காகிதத்தில் மட்டுமே இருக்கிறது. தேவையான அளவு நாட்கள் வேலை எல்லோருக்கும் கிடைப்பதில்லை. மாத சம்பளமும் கிடைப்பதில்லை.

இங்கேயும் தமிழர் என்ற இனவாத நோக்கில், பாரபட்சமாக நமது மக்கள் நடத்தப்படுகிறார்கள் என நான் நினைக்கிறேன். தமிழகத்தில் இருந்து வந்த பொருட்களை இலங்கையில் துன்பத்தில் வாழும் எல்லா மக்களுக்கும் கொடுங்கள் என நான்தான் முதன் முதலில் சொன்னேன். பாராளுமன்றத்திலும் சொன்னேன். அதையிட்டு தமிழக முதல்வரும் மகிழ்ச்சி தெரிவித்து இருந்தார்.

ஆனால், அரசாங்கம் கடைசி கட்டத்தில் தமிழகத்தில் இருந்து வந்த பெருந்தொகை பொருட்களை உணவு ஆணையாளரிடம் கொடுத்து விநியோகம் செய்தது. இதில் நமது மக்களின் பிரதிநிதிகள் தொடர்பு படவில்லை. ஆகவே இந்த பொருட்களை அரசு அதிகாரிகள் தனது சொந்த விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் விநியோகம் செய்தார்கள்.

இவற்றை நான் அறிந்து வைத்துள்ளேன். நம் நாட்டின் பின்தங்கிய மக்களுக்கு என உலகம் தரும் நன்கொடைகள் எல்லோருக்கும் பாரபட்சமின்றி கிடைக்க வேண்டும் என்பது எனது குரல். அது யாருக்கு கேட்க வேண்டுமோ அவர்களுக்கு கேட்கும்படி நான் செய்வேன்.

Leave A Reply

Your email address will not be published.