போர்க்குற்றவாளிகளின் அரசே ஆட்சியில்! – விக்கி காட்டம்; ரணில் – ராஜபக்சகளின் முகவரே அலி சப்ரி என்றும் விசனம்.

“முஸ்லிமான அலி சப்ரியை வைத்து ராஜபக்‌ச அரசு நாடகமாடுகின்றது. ரணில் – ராஜபக்சக்களின் முகவரே அவர். நடப்பது போர்க்குற்றவாளிகளின் அரசே. அதனால்தான் இறைமை பற்றி அலி சப்ரி பேசி சர்வதேச விசாரணையை நடத்த விடாமல் செய்யப் பார்க்கின்றார். ஆனால், அந்தப் பருப்பு வேகாது என்றே நான் நினைக்கின்றேன்” – என்று காட்டத்துடன் கருத்துத் தெரிவித்துள்ளார் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன்.

‘ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் அறிக்கை பற்றி உங்கள் கருத்தென்ன?’ – என்று தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சிங்களத்தில் ஒரு முது மொழி உண்டு ‘கொஹட யன்னே. மல்லே பொல்’ என்பார்கள். அதாவது எங்கே போகின்றாய் என்று கேட்டால் பையிலே தேங்காய் என்று மறு மொழி சொல்வது போல் 46/1 பிரேரணையை ஏன் நடைமுறைப்படுத்தவில்லை என்று கேட்டதற்கு சட்டத்தில் மாற்றம் ஏற்படுத்த இருப்பதாகவும் பொருளாதார ரீதியாக அதைச் செய்வோம், இதைச் செய்வோம் என்றும் கூறியுள்ளார்.

எனினும், நடைமுறைப்படுத்தாமைக்கு ஒரேயொரு காரணம் அவரின் பேச்சில் தென்படுகின்றது. அதாவது சர்வதேச நீதிபதிகள் போர்க்குற்ற விசாரணையை நடத்துவது நாட்டின் இறைமையைப் பாதிக்கும் என்றுள்ளார். அது வெறும் பிதற்றல்.

முதலாவது – இலங்கை அரசு உள்ளடங்கலாகவே 46/1 பிரேரணை சென்ற ஆண்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இலங்கை அதை ஏற்க முடியாது என்று அன்று வெளிநடப்பு செய்யவில்லை.

இரண்டாவது – ஏப்ரில் 21 ஆம் திகதிய உயிர்த்த ஞாயிறு விசாரணைக்காகப் பிறநாட்டு விசாரணையாளர்களை அரசாங்கம் தருவித்து விசாரணை நடத்தியது. அப்போது நாட்டின் இறைமை எங்கு போனது?

மூன்றாவதாக – போர்க்காலத்தில் இஸ்ரேலிய மொஸாட் போன்ற அமைப்புக்களை இங்கு தருவித்து அரசுக்குச் சார்பாக, விடுதலைப்புலிகளுக்கு எதிராகப் போரில் ஈடுபட வைத்த போது எமது நாட்டின் இறைமை எங்கு போனது?

நான்காவதாக – உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுவெடிப்பு பற்றி ஷானி அபேசேகரா என்ற சிரேஷ்ட பொலிஸ் அலுவலர் விசாரணை செய்த போது, அந்தக் குண்டு வெடிப்பில் இராணுவத்தினரின் பங்கு இருந்தமை அவருக்குத் தெரியவந்தது. அதுபற்றி இராணுவத்தினருடன் பேசிய போது, அவர்கள் தமக்கு இட்ட ஆணைகளையே தாம் நிறைவேற்றினார்கள் என்று கூறியுள்ளார்கள். ஆகவே குண்டு வெடிப்பில் அரசின் பங்கு இருந்திருக்கின்றது. இதையே பேராயர் மல்கம் ரஞ்சித்தும் கூறி வருகின்றார்.

ஆனால், விசாரணை பற்றிய அறிக்கை வெளிவந்ததும் ஷானி அபேசேகராவைச் சிறையில் அடைத்தார்கள்.

இவ்வாறான ஒரு நாட்டில் உள்நாட்டு விசாரணையின் ஊடாக உண்மை புலப்படுமா? உண்மையை வெளிவர அரசாங்கத்தினர் இடம் அளிப்பார்களா?

முஸ்லிமான அலி சப்ரியை வைத்து ராஜபக்‌ச அரசு நாடகமாடுகின்றது. ரணில் – ராஜபக்சக்களின் முகவரே அவர். நடப்பது போர்க்குற்றவாளிகளின் அரசே. அதனால்த்தான் இறைமை பற்றி அலி சப்ரி பேசி சர்வதேச விசாரணையை நடத்த விடாமல் செய்யப் பார்க்கின்றார். ஆனால், அந்தப் பருப்பு வேகாது என்றே நான் நினைக்கின்றேன்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.