நல்லூரில் குழப்பம் விளைவித்த முன்னணியினர்! – தட்டிவீழ்த்தப்பட்டது பொதுச்சுடர்.

தியாக தீபம் திலீபனின் 35ஆவது ஆண்டின் இறுதி நாள் நிகழ்வு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரின் நாட்டாமைத்தனத்தால் பெரும் குடுமிப்பிடி சண்டையில் நடந்து முடிந்தது.

தியாக தீபம் திலீபனின் இறுதி நாள் நினைவேந்தல் நிகழ்வு இன்று நல்லூரில் உள்ள திலீபனின் நினைவேந்தல் தூபியில் நடைபெற்றது.

நினைவேந்தல் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே நினைவிடத்தைச் சுற்றி வளைத்து மஞ்சள் ரீசேர்ட் அணிந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் நினைவேந்தலைச் செய்வதற்குத் தயாராகி நின்றனர்.

தியாக தீபம் திலீபன் உயிர்நீத்த 10.48 மணிக்குப் பொதுச்சுடர் ஏற்றுவதற்குத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் முயற்சித்த நிலையில், நல்லூரில் உள்ள நினைவிடத்தில் தியாக தீபம் திலீபனுக்காக இரண்டு இளைஞர்கள் பறவைக் காவடி எடுத்தது வந்ததுடன், அவர்களை விடுமாறு முன்னாள் போராளிகள் சிலர் கோரிக்கை விடுத்தனர்.

முன்னாள் போராளிகளுடன் ஏட்டிக்குப் போட்டியாகச் செயற்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர், “நாங்களே பொதுச்சுடர் ஏற்றுவோம்” என்று மல்லுக்கட்டிப் பொதுச்சுடரை ஏற்றினர்.

அதன் பிறகாவது பறவைக் காவடி எடுத்தவரை நினைவிடத்துக்குள் அனுமதிக்குமாறு முன்னாள் போராளிகளால் கோரப்பட்டபோதும் அதற்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் மறுப்புத் தெரிவிக்கவே அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டதுடன் பொதுச்சுடரும் தட்டிவீழ்த்தப்பட்டது.

பெரும் இழுபறிக்கு மத்தியில் பறவைக் காவடி எடுத்து வந்த இளைஞர்கள் காவடியை இறக்கி தியாக தீபம் திலீபனுக்கு மலர் தூவி அஞ்சலித்ததுடன் நினைவேந்தல் பெரும் குழப்பத்துக்கு மத்தியில் நடந்து முடிந்தது.

தியாக தீபம் திலீபனுக்குப் பலரும் நினைவேந்தல் செய்வதற்கு முற்பட்டபோதும் அங்கிருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் அவர்கள் மீது வசை பாடியதையும் அவதானிக்க முடிந்தது.

இவ்வளவு குழப்பங்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்த போதும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைகட்டி நடப்பவற்றை வேடிக்கை பார்த்ததை அவதானிக்க முடிந்தது.

இந்த ஆண்டு தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு இலங்கை அரசு எந்தவிதத்திலும் இடையூறு ஏற்படுத்தாத போதும், தமிழ் கட்சிகளும் தமிழ்த் தரப்புகளுமே நினைவேந்தலுக்கு இடையூறு ஏற்படுத்தியமை அங்கிருப்பவர்கள் மத்தியில் பலத்த விமர்சனத்தை உருவாக்கியது.

நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலில் இன்று ஏற்பட்ட குழப்பத்தை அடுத்து பொதுச்சுடர் தட்டி வீழ்த்தப்பட்டதுடன், அந்த விபத்தில் அங்கு நின்ற ஒருவர் காயமடைந்தார்.

இதையடுத்து நோயாளர் காவு வண்டி வரவழைக்கப்பட்டு குறித்த நபர் யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

Leave A Reply

Your email address will not be published.