5வது டி20 போட்டி: 6 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி.

இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 7 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை 4 போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. 4 போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா 2 வெற்றிகள் பெற்றுள்ளன. இதனால் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலை வந்தது.

இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 5வது டி-20 போட்டி லாகூரில் நேற்று இரவு தொடங்கி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சைத்தேர்வு செய்தது. இதன்படி முதலாவதாக களமிறங்கிய பாகிஸ்தான் அணி 19 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 145 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 63 (46) ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இங்கிலாந்து அணியின் சார்பில் அதிகபட்சமாக மார்க் வுட் 3 விக்கெட்டுகளும், வில்லி மற்றும் சாம் சரண் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்.

இதனைத்தொடர்ந்து 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணியின் சார்பில் பிலிப் சால்ட் மற்றும் ஹேல்ஸ் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். பாகிஸ்தான் அணியின் சிறப்பான பந்து வீச்சால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. அந்த அணியில் டேவிட் மலான் தனது நிதான ஆட்டத்தால் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கேப்டன் மொயின் அலி தனது சிறப்பான ஆட்டம் மூலம் 35 பந்துகளில் தனது அரைசதத்தை பதிவு செய்தார்.

இறுதியில் மொயின் அலி 51 (37) ரன்களும், டேவிட் வில்லி ரன் ஏதும் எடுக்காமலும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் இங்கிலாந்து அணி 20 ஒவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் அணியின் சார்பில் அதிகபட்சமாக ஹரிஸ் ரூப் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன்மூலம் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது டி-20 போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது. இதன்படி 7 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 3-2 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி முன்னிலை பெற்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.