எனது மகனை பழிவாங்க வேண்டாம் – முதல்வர் ஸ்டாலினுக்கு சவுக்கு சங்கரின் தாயார் கடிதம்

திமுக அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தனது மகனை பழிவாங்க வேண்டாம் என சவுக்கு சங்கரின் தாயார் கமலா முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், தனது மகன் சங்கருக்கு கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மதுரை உயர் நீதிமன்ற கிளை 6 மாதம் சிறை தண்டனை விதித்தது எனவும் அதன் பின் சிறையில் அடைக்கப்பட்டார் எனவும் செய்திகளின் வாயிலாக அறிந்து கொண்டதாக கூறினார்.

மேலும், “மதுரை சிறையில் சங்கரை வைப்பதாக நீதிமன்ற தீர்ப்பு கூறியிருந்த போதிலும், இரவோடு இரவாக சங்கரை கடலூர் சிறைக்கு மாற்றியுள்ளனர். இது தொடர்பாக எனக்கோ அல்லது என் குடும்ப உறுப்பினர்களுக்கு எந்த தகவலும் இந்நாள் வரை தெரிவிக்கப்படவில்லை. சங்கரை சென்னை புழல் சிறைக்கு மாற்ற வேண்டும் என்றும் அவருக்கு போதிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும் தமிழக அரசின் உயர் அதிகாரிகளுக்கு நான் வேண்டுகோள் விடுத்திருந்தேன். இந்நாள் வரை அது பற்றியும் எனக்கு எந்தவிதமான பதிலும் தெரிவிக்கப்படவில்லை.”

தன்னுடைய வயோதிகம் காரணமாக உடல் நலப் பிரச்சினைகளும் இருப்பதினால் தனது மகன் சங்கரை கடலூர் சிறைக்கு சென்று பார்க்க முடியாத நிலையில் உள்ளதாக கூறினார். தனது மகன் சங்கர் லஞ்ச ஒழிப்பு துறையில் பணியாற்றும் போது அவர்

மீது சில குற்றச்சாட்டுகளை சுமத்தி இடைக்கால பணி நீக்கம் செய்யப்பட்டார் எனவும் அது சம்மந்தமான குற்ற வழக்கில் அவர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார் எனவும் சுட்டிக்காட்டினார்.

இப்பொழுது மதுரை உயர்நீதிமன்ற கிளை வழங்கிய அவமதிப்பு வழக்கின் தீர்ப்பை காரணம் காட்டி தனது மகன், லஞ்ச ஒழிப்பு துறையில் பணியில் இருந்து அவசர அவசரமாக நீக்கப்பட்டுள்ளார் என்பதையும் செய்திதாள்கள் மற்றும் ஊடகங்கள் வழியாகவே தெரிந்து கொண்டதாக கூறினார்.

மேலும் “சங்கருக்கு கொடுக்கப்பட்ட ஏன் தங்களை பணியிலிருந்து நீக்கம் செய்யக்கூடாது என்ற நோட்டீசை அவர் வாங்க மறுத்துவிட்டார் என்ற காரணத்தைக் காட்டி கடலூர் சிறை அதிகாரி எனது மகன் சங்கரை யாரும் ஒரு மாதகாலம் சந்திக்கக் கூடாது என்று தண்டனை கொடுத்திருப்பதாக அதனையும் செய்திகளின் வாயிலாக நான் அறிந்து கொண்டேன். சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் எனது மகனிடம் எந்த விதமான சட்ட உதவிகளை கூட நாட முடியாத ஒரு சூழலில் அவரிடம் விளக்கம் கேட்டு லஞ்ச ஒழிப்பு துறையினர் பணிநீக்கம் தொடர்பான நோட்டீசை வழங்க முயற்சி செய்திருப்பது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது” என கூறினார்.

தனது மகன் சங்கர் சமீப காலமாக திமுக அரசாங்கத்தையும் அரசு அதிகாரிகளையும் திமுக குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான கட்டுமான நிறுவனங்களில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து தொடர்ந்து பேசி வந்ததால் திமுக அரசு, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவும் பழிவாங்கும் நோக்கத்துடன் செயல்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் “திமுக அரசாங்கம் எனது மகன் சவுக்கு சங்கரை அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக பழிவாங்கும் நோக்கத்துடனும் செயல்பட வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இந்த விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் தலையிட்டு உரிய உத்தரவுகளை பிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

1 Comment
  1. விஸ்வநாத ஐயர் மஹேஸ்வரசர்மா says

    ஆட்சியில் நடக்கும் குற்றங்கள் குறைகளைச் சொன்னால் ஆட்சியாளர்களுக்குப் பிடிக்காது அவர்கள் பொய்களைச் சொல்லி கேஸ் போட்டு உள்ளே தள்ளுவது இது திராவிட மாடல் ஆட்சி ஆகும்

Leave A Reply

Your email address will not be published.