தமிழர் தாயகத்தைச் சிங்களப் பேரினவாதம் ஆக்கிரமிக்க இடமளியோம்! – சுகாஷ் சூளுரை.

“தமிழர் தாயகத்தைச் சிங்களப் பேரினவாதம் ஆக்கிரமிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.”

இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஷ் தெரிவித்தார்.

குருந்தூர் மலைக்கு இன்று விஜயம் செய்து அங்குள்ள நிலைமைகள் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கொழும்பில் இருந்து வந்திருக்கின்ற விசேட குழு ஒன்று எந்தவிதமான முன்னறிவிப்புக்களும் இன்றி குருந்தூர்மலையை ஆக்கிரமிக்கவுள்ளது என்று நம்பத்தகுந்த தகவல் கிடைக்கப் பெற்றதை அடுத்து உடனடியாக இங்கு திரண்டு வந்திருக்கின்றோம்.

நாங்கள் வந்ததன் பிற்பாடு அதற்கான ஆயத்தங்கள் கைவிடப்பட்டன என்று உணருகின்றோம். ஆனால், வந்த குழுவினர் இந்த நிமிடம் வரை முல்லைத்தீவிலே முகாம் இட்டு இருக்கின்றனர் என்று எங்களுக்கு நம்பகத்தனமான தகவல்கள் கிடைத்துள்ளது.

தமிழர் தாயகத்தைச் சிங்களப் பேரினவாதம் ஆக்கிரமிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. தமிழ் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.

எந்த வடிவத்தில் ஆக்கிரமிப்பு வந்தாலும் தொடர்ந்து எங்களுடைய முயற்சியையும், எதிர்ப்பையும் காட்டுவதன் மூலமே எங்களுடைய தாயகத்தைப் பாதுகாக்க முடியும். அந்த வரலாற்றுக் கடமையைச் செய்துகொண்டிருப்போம்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.