ஞானசார தேரரை உடன் கைதுசெய்ய நீதிமன்றம் உத்தரவு!

பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரைக் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றம் இன்று பிடியாணை பிறப்பித்துள்ளது.

தனக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் நீதிமன்றில் முன்னிலையாகாத காரணத்தால் இந்தப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் வெறுப்புணர்வை ஏற்படுத்தினார் என்று கூறப்படும் குற்றச்சாட்டில் ஞானசார தேரருக்கு எதிராக மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அது தொடர்பான விசாரணைகளுக்காகக் கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றத்தில் இன்று அவர் முன்னிலையாகியிருக்கவில்லை.

ஞானசார தேரர் கலந்துகொள்ளாதமைக்கான நியாயமான காரணத்தை முன்வைக்க பிரதிவாதி தரப்பு தவறியதையடுத்து, பிடியாணை பிறப்பிக்க நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் கொழும்பு குற்றப் பிரிவு நீதிமன்றில் ‘பி’ அறிக்கை தாக்கல் செய்திருந்தது.

Leave A Reply

Your email address will not be published.