தொல்லியல் திணைக்களத்தை வழிநடத்தும் பௌத்த பிக்குகள் – சார்ள்ஸ் எம்.பி. சீற்றம்.

“வனஇலாகா, வனஜீவராசிகள், மகாவலி, தொல்பொருள் ஆகிய நான்கு திணைக்களங்களும் அமைச்சரின் கட்டுப்பாட்டில் இல்லை. தொல்பொருள் திணைக்களத்தை ஒரு சில பௌத்த பிக்குகள்தான் வழிநடத்துகின்றனர்.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இ.சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

வவுனியாவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மகாவலி அபிவிருத்தி அதிகார சபை 1970 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அது முழுமையாகத் தமிழர்களது இன விகிதாசாரத்தை இல்லாதொழிப்பதற்காக உருவாக்கப்பட்டது. அதனை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

1988 ஆம் ஆண்டு மகாவலி எல் வலயம் வர்த்தமானி பிரசுரம் செய்யப்பட்டு இன்று 34 வருடங்கள் முடிவடைந்திருக்கின்றன. அதில் வவுனியா, முல்லைத்தீவு உள்ளடங்களாக பல பிரதேசங்கள் உள்வாங்கப்பட்டுள்ளன.

அதற்கமைய வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்களை அபிவிருத்தி என்ற போர்வையில் தென்பகுதி மக்களுக்கு வழங்கும் செயற்பாடு தொடர்ந்தும் நடைபெறுகின்றது.

மகாவலி எல் வலயத்தால் இந்த இரண்டு மாவட்டங்களில் ஒரு தமிழருக்குக் கூட காணி வழங்கப்படவில்லை. எனவே, மகாவலி அதிகார சபையின் செயற்பாடுகள் தொடர்பாக மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

தற்போது ஒரு சாதகமான நிலை உள்ளது. கடந்த காலங்களில் விவசாய அமைச்சர் ஒருவராக இருப்பார். வனஇலாகா, வனஜீவராசிகள் அமைச்சர் வேறு ஒருவராக இருப்பார். ஆகவே, சில விவசாயிகளின் பிரச்சினையில் இரண்டு அமைச்சுக்கள் தொடர்புபட்டிருக்கும். தற்போது ஒரே அமைச்சர். விவசாயம், வனஇலாகா அமைச்சர் இரண்டும் ஒருவரே. அமைச்சர் மகிந்த அமரவீரவே அவர். அதுவும் எப்ப மாறுதோ தெரியாது. விவாசாயிகளின் கோரிக்கையை ஒரு குழுவாகக் கொண்டு செல்லும் போது எமக்கு ஒரு சாதகம் இருக்கின்றது. அவர் ஒரு சில விடயங்களைப் பரிசீலிக்க கூடியவர். இதற்கு ஒரு கூட்டு முயற்சி சாதகமாக அமையும்.

விவசாயத்தையும், கால்நடையையும் பிரித்துப் பார்க்க முடியாது. இந்த விடயங்கள் தொடர்பில் ஒரு கூட்டு முயற்சி எடுக்க வேண்டும். வனவிலங்குகளால் விவசாயத்துக்குப் பாதிப்பு ஏற்படுகின்றது. செட்டிகுளத்தில் இவ்வாறான அதிக பல பாதிப்புக்கள் ஏற்படுகின்றன. குரங்குகளின் தொல்லை அதிகமாகக் காணப்படுகின்றது. அத்துடன் யானைகளின் செயற்பாட்டாலும் மக்கள் வாழ்வாதாரத்தை இழக்க வேண்டியுள்ளது.

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் தொடர்சியாகக் கதைத்தும் எதுவும் நடக்கவில்லை என்று விவசாயிகள் கூட்டங்களுக்கு வருவதில்லை என நினைக்கிறேன். வனஇலாகா, வனஜீவராசிகள், மகாவலி, தொல்பொருள் திணைக்களம் இந்த நான்கும் அமைச்சரின் கட்டுப்பாட்டில் இல்லை. தொல்பொருள் திணைக்களத்தை ஒரு சில பௌத்த அமைப்புக்கள்தான் வழி நடத்துகின்றன. அமைச்சர் ஏதாவது கதைத்தால் அவரது தொகுதியில் உள்ள பிக்கு அது பற்றி கதைக்க வேண்டாம் என்கின்றாராம். ஆகவே, இன்றைய நிலைமையைப் புரிந்துகொள்ள வேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.