22 ஆவது திருத்தம் மீது இன்று வாக்கொடுப்பு! – கூட்டமைப்பின் இன்னமும் முடிவில்லை.

அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான வாக்கொடுப்பு இன்று மாலை நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.

இது தொடர்பான இரண்டாம் நாள் விவாதம் இன்று காலை முதல் நாடாளுமன்றில் இடம்பெறும்.

அது தொடர்பில் நேற்றைய தினமும் விவாதம் நடைபெற்றது.

அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி என்பன ஆதரவு வழங்கவுள்ளன என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நேற்று நாடாளுமன்றத்தில் வைத்து அறிவித்திருந்தார்.

எனினும், தேவையற்ற திருத்தங்களை உள்ளடக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படின் அதற்கு ஆதரவு வழங்கப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் தமது கட்சி அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவு வழங்கவுள்ளது என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.

அதேவேளை, அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தை நேற்றையை நாடாளுமன்ற விவாதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கடுமையாக விமர்சித்திருந்தாலும் இன்றைய வாக்கெடுப்பில் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு இன்னமும் தெரியவரவில்லை.

Leave A Reply

Your email address will not be published.