ராஜபக்சக்கள் அழித்த நாட்டைக் கட்டியெழுப்ப ஓரணியில் திரள்வோம்! – சஜித் அறைகூவல்.

ராஜபக்சக்கள் அழித்த நாட்டைக் கட்டியெழுப்ப நாம் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அழைப்பு விடுத்தார்.

இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பெரும் வரலாற்றுச் சரித்திரம் இருப்பதாகக் கூறினாலும், ராஜபக்சர்களால் தற்போதைய ஆட்சியாளர்கள் கூட உலகம் முழுவதும் பிச்சை எடுக்க வேண்டியுள்ளது. இந்நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுக்க இன, மத, சாதி, நிற பேதங்களுக்கு அப்பாற்பட்டு நாட்டின் அபிவிருத்திக்காக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். அதற்கான சரியான வேலைத்திட்டம் ஐக்கிய மக்கள் சக்தியிடம் இருக்கின்றது. அதனை நடைமுறைப்படுத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி ஒரு நல்ல அணியைக் கொண்டிருக்கின்றது.

சஜித் பிரேமதாஸ, தேர்தலில் வெற்றி பெற்றால், அதன் உண்மையான வெற்றியாளர்கள் தாய் நாடும் அதன் 220 இலட்சம் மக்களும்தான்.

ஸ்மார்ட் தீர்வுகள், புத்திசாலித்தனமான தீர்வுகளை வழங்குவதாகக் கூறி ஆட்சி வந்த சேர்மார்கள் இறுதியில் நாட்டையே வங்குரோத்தாக்கினர். இதனால், சிறு குழந்தை முதல் கர்ப்பிணித் தாய் வரை அனைத்து மட்டங்களிலுமுள்ள குடிமக்கள் தற்போது மிகவும் அவல நிலையில் இருக்கின்றனர். இறுதியாக உணவு வேளையைக் கூட தயாரிக்க முடியாத நிலையில் உள்ளனர்.

கல்வித் துறையின் பிரச்சினைகள்,சுகாதாரத் துறையின் பிரச்சினைகள், கைத்தொழில் துறையின் பிரச்சினைகள் உட்பட பல தொழில் துறைகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும்.

அரசு, மக்கள் போராட்டத்துக்குப் பயந்து பல்வேறு கட்டளைச் சட்டங்களைப் பிரயோகித்து மக்களை ஒடுக்குகின்றது.

இந்த அடக்குமுறையைத் தாங்கும் உச்ச வரம்பை மக்கள் எட்டிவிட்டனர். அதன் காரணமாக பல்வேறு துறைசார் தொழில் வல்லுநர்கள் மற்றும் புத்திஜீவிகள் இலட்சக்கணக்கில் நாட்டை விட்டு வெளியேற ஆயத்தமாகி வருகின்றனர்.

விரைவில் முழு நாட்டு மக்களும் வீதியில் இறங்கி மக்களுக்குப் பக்கபலமாக இருக்கும் பொது மக்கள் ஆட்சியொன்றை உருவாக்குவர்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.