தமிழ்க் கூட்டமைப்பினரைச் சந்தித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழு.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவினர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்தித்து முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இந்தச் சந்திப்பு கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பியின் கொழும்பு இல்லத்தில் இன்று நடைபெற்றது.

இதன்போது கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தனுடன் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் எம்.பியும் கலந்துகொண்டார்.

மேற்படி சந்திப்பில் பல முக்கிய விடயங்கள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவினர் விரிவாகக் கலந்துரையாடினர் என்று கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. தெரிவித்தார்.

மனித உரிமைகள், பொருளாதார மீள்கட்டமைப்பு, ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குதல், மாகாண சபைத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் என்பவற்றை நடத்த வேண்டியதன் தேவைப்பாடு உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் இதன்போது பேசப்பட்டன என்று சுமந்திரன் எம்.பி. மேலும் கூறினார்.

இதேவேளை, நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி, பயங்கரவாதத் தடைச் சட்டம், நல்லிணக்கம், அதிகாரப் பகிர்வு, அரசமைப்பு சீர்திருத்தம் மற்றும் வடக்கு, கிழக்கு காணி விவகாரம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் பேசினோம் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவினர் தெரிவித்தனர்.

இது நல்லதொரு கலந்துரையாடல் என்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவினர் மேலும் கூறினர்.

Leave A Reply

Your email address will not be published.