ராஜபக்சக்களுடன் கூட்டுச் சேர சு.க. இனிமேல் தயார் இல்லை! – ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக மாறுவோம்.

“நாட்டை அழித்த ராஜபக்சக்கள் வீற்றிருக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இனிமேல் கூட்டணி அமைக்கத் தயாரில்லை. நாட்டின் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மீண்டும் உருவெடுக்கும். ‘மொட்டு’க் கட்சி போல் எமது கட்சியும் துண்டுதுண்டாகச் சிதறுண்டு போகாது.”

– இவ்வாறு முன்னாள் ஜனாதிபதியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஒவ்வொரு கட்சிக்குள்ளும் எதிரிகளும், துரோகிகளும் இருப்பார்கள். அவர்களை அடையாளம் கண்டு களையெடுப்பது கட்சியின் தலைமையின் பொறுப்பு.

அந்தப் பணியை மொட்டுக் கட்சியின் தலைமை செய்யத் தவறிவிட்டது. அதனால்தான் அந்தக் கட்சி இப்போது துண்டுதுண்டாகச் சிதறுண்டு போயுள்ளது. அந்தக் கட்சியால் இனிமேல் மீண்டெழவே முடியாது.

மொட்டுக் கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்சவா? பஸில் ராஜபக்சவா? அல்லது ஜி.எல்.பீரிஸா என்ற சந்தேகம் பலருக்கும் உண்டு.

மொட்டுக் கட்சியுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இனிமேல் கூட்டணி அமைக்கத் தயாரில்லை. நாட்டின் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மீண்டும் உருவெடுக்கும். மக்கள் நல்லாட்சியையே விரும்புகின்றார்கள்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.