யாழில் டெங்கு தீவிரம்! – அவதானமாக இருக்கும்படி சுகாதாரத்துறை அறிவுறுத்து.

“யாழ்ப்பாணம் மாவட்டத்தில் டெங்குத் தொற்று தீவிரம் பெற்றுள்ளது. தொற்றாளர்களின் எண்ணிக்கையும், டெங்குத் தொற்றால் உயிரிழப்போர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது. எனவே தொற்று மேலும் தீவிரமாகாமல் இருக்கவும் தொற்றுக்கு தாம் உட்படாமல் இருக்கவும் வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் பொதுமக்கள் பின்பற்ற வேண்டும்.”

இவ்வாறு யாழ். மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“யாழ். மாவட்டத்தில் டெங்கு நோய் அதிகரித்து செல்வதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.

யாழ். மாவட்டத்தில் இந்த வருடம் இதுவரையான காலப்பகுதியில் 2 ஆயிரத்து 774 வரையானோர் டெங்கு நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 8 பேர் இந்த வருடத்தில் உயிரிழந்துள்ளனர்.

கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் தொற்றின் தாக்கம் தீவிரமாகவுள்ளது. தற்போது மழைக்காலம் என்பதால் பொதுமக்கள் கூடுதல் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

டெங்கு நுளம்பு சுத்தமான தண்ணீர்ப் பரப்பிலேயே பல்கிப்பெருகும். ஆதலால், ஒவ்வொரு குடியிருப்பாளர்களும் தாம் சார்ந்த பகுதிகளில் துப்புரவைச் சரிவரப் பேணி ஒத்துழைப்புத் தர வேண்டும்.

இந்தக் காலப்பகுதியிலே காய்ச்சல் ஏற்பட்டால் அது பெரும்பாலும் டெங்கு நோயாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

எனவே பொதுமக்கள் தாமதிக்காது உடனடியாகவே மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்.கொள்ள வேண்டும். தாமதமாக மருத்துவமனைகளை நாடுகின்றமையே இறப்புகள் ஏற்படுவதற்குக் காரணம்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.