யாழில் தாயும் 7 மாதக் குழந்தையும் கிணற்றிலிருந்து சடலங்களாக மீட்பு – சந்தேகத்தில் கணவன் கைது.

யாழ்ப்பாணம், தென்மராட்சி, மிருசுவில் பகுதியில் உள்ள வீடொன்றின் கிணற்றில் இருந்து தாயும், பெண் குழந்தை ஒன்றும் இன்று சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

மிருசுவில் தெற்கைச் சேர்ந்த பிரகாஷ் சந்திரமதி (வயது 40) மற்றும் அவரின் ஏழு மாதப் பெண் குழந்தையான பிரகாஷ் காருண்யா ஆகியோரே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

கணவன் – மனைவிக்கு இடையில் நேற்றிரவு வாய்த்தர்க்கம் ஏற்பட்டது எனவும், அதன் பின்னர் இன்று அதிகாலை 2 மணியளவில் மனைவியையும் பிள்ளையையும் காணவில்லை எனக் கணவன் தேடிய நிலையில் காலை இருவரும் வீட்டுக் கிணற்றில் சடலங்களாகக் காணப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் கொடிகாமம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்துச் சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அதேவேளை, சாவகச்சேரி நீதிமன்ற நீதிவான் அ. ஜுட்சன் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்ததுடன் சடலத்தை மீட்டு உடல்கூற்றுப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்குமாறும் உத்தரவிட்டார்.

பொலிஸாரின் விசாரணைகளின் அடிப்படையில் உயிரிழந்த பெண்ணின் கணவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.

Leave A Reply

Your email address will not be published.