ஹேக் செய்யப்பட்ட தொழிலதிபரின் போன்…ஒரே நாளில் காணாமல் போன ரூ. 1 கோடி!

மகாராஷ்டிரா மாநிலம் தானே நகரில் தொழிலதிபர் ஒருவர் தனது மொபைல் போன் ஹேக் செய்யப்பட்டு அதிலிருந்த 99.50 லட்சம் ரூபாய் திருடப்பட்டதாக பரபரப்பு புகாரை அளித்துள்ளார்.

நவம்பர் 6 மற்றும் 7ஆம் தேதிக்கு இடையே ஹேக்கிங் நடந்ததாகக் கூறப்படும் நிலையில், அவரது வங்கிக் கணக்குகளில் இருந்து மற்ற கணக்குகளுக்கு நெட் பேங்கிங் மூலம் பணம் மாற்றப்பட்டதாக வாக்லே எஸ்டேட் காவல் நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்ட விதிகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, குற்றவாளிகளைப் பிடிக்க முயற்சிகள் வேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், குற்றச்செயலில் ஈடுபட்ட அந்த கும்பல் செல்போனை எவ்வாறு ஹேக் செய்தது என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருவதாக காவல் அதிகாரி கூறியுள்ளார்.

இதே போன்று, கடந்த மாதம் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் 23 வயது பெண் ஒருவர் தனது சகோதரருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு தேடிய போது மோசடி கும்பலிடம் சிக்கி லட்சக்கணக்கில் பணத்தை இழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஸ்காட்லாந்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, மும்பையைச் சேர்ந்த ஒருவருடன் புகார்தாரரான இப்பெண் தொடர்பு கொண்ட போது ரூ. 8.20 லட்சம் ஏமாற்றப்பட்டதாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. மேலும், குற்றஞ்சாட்டப்பட்டவர் மும்பையைச் சேர்ந்த ராஜீவ் ஷர்மா என்ற சத்னம் சிங் என அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டார்.

அதேபோல், மும்பையைச் சேர்ந்த 49 வயது பெண் ஒருவர் தீபாவளி பண்டிகைக்கு இனிப்புகளை ஆன்லைனில் ஆர்டர் செய்யும் போது ஆன்லைன் மோசடியால் ரூ. 2.4 லட்சத்தை இழந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மும்பை புறநகர் அந்தேரியில் வசிக்கும் பூஜா ஷா என்ற பெண், கடந்த மாதம் உணவு டெலிவரி செயலியில் இனிப்புகளை ஆர்டர் செய்து ஆன்லைனில் ஆயிரம் ரூபாயை செலுத்த முயன்றுள்ளார். அப்போது பரிவர்த்தனை தோல்வியடைந்துள்ளது.

பின்னர் ஆன்லைனில் அந்த இனிப்பு கடையின் எண்ணைக் கண்டுபிடித்துள்ளார். அந்த எண்ணிற்கு போன் செய்தபோது மறுமுனையில் இருந்த ஒருவர் அவரது கிரெடிட் கார்டு எண்ணையும் செல்போனில் வந்த ஓடிபியையும் பகிருமாறு கூறியுள்ளார். அந்தப் பெண்ணும் பின்விளைவுகளை அறியாமல் தனது கார்டு விவரங்களையும் ஓடிபியையும் பகிர்ந்துள்ளார். பகிர்ந்த சில நிமிடங்களில் அப்பெண்ணின் கணக்கில் இருந்து ரூ. 2,40,310 பறிக்கப்பட்டது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அப்பெண், ஓஷிவாரா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

Leave A Reply

Your email address will not be published.