கூட்டமைப்பு ஒரு விபச்சார வீடு; சம்பந்தன் பதவி விலகவேண்டும் வினோ எம்.பி. காட்டம்.

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு (அரசியல்) விபச்சார இல்லமாக செயற்படுவதாக நான் குறைகூறினேன். அது உண்மையே. இரா.சம்பந்தன் உட்பட அனைத்துத் தமிழ்த் தேசிய தலைவர்களும் தோற்றுப்போன தலைவர்களே. அவர்கள் உடனடியாகப் பதவி விலக வேண்டும்.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோவின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோரதராதலிங்கம் தெரிவித்தார்.

வவுனியா நகர மண்டபத்தில் நேற்று நடைபெற்ற முன்னாள் போராளிகளின் நலன் பேணும் அமைப்பின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:-

“இந்த நிகழ்வு தொடர்பில் ஆரம்பத்தில் பல சந்தேங்கள் இருந்தன. காலையில் எழுந்தவுடன் இரண்டு, மூன்று பத்திரிகைள் பார்ப்பது வழமை. யாழ்ப்பாணப் பிராந்திய பத்திரிகை ஒன்று, இங்கு இரண்டு பேரை முதன்மைப்படுத்தி அவர்களின் தயார்ப்படுத்தலில் இந்த நிகழ்வு நடைபெற இருக்கின்றது என்று ஆசிரியர் தலையங்கம் அல்லது வேறு பந்தியில் எழுதப்பட்டிருந்தது. அதையும் பார்த்தேன். எனக்கு இது தேவையா? இதில் அரசியல் விளையாடப் போகின்றதா? இதில் உள்ள சாதக, பாதகம் பற்றி இரண்டு பக்கமும் யோசித்து விட்டுத்தான் இந்த நிகழ்வில் கலந்துகொண்டேன்.

ஒரு நேரத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சி முக்கியஸ்தர்கள் சம்பந்தன் ஐயாவின் தலைமையில் வவுனியாவில் கூடியிருந்த வேளை, அப்பொழுது யாழ். ஊடகவியலாளர் முன்னாள் சிரேஷ்ட போராளிகளை அழைத்து வந்து நாடாளுமன்றத் தேர்தலில் எங்களையும் இணைத்துப் போட்டியிட வேண்டும், போராளிகளுக்கான வாய்ப்புக்களை வழங்க வேண்டும் என்று கேட்ட போது, ஒரேயடியாக அதற்குரிய தகுந்த காரணம் இப்போது இல்லை, போராளிகளை இப்போது இணைக்க முடியாது எனச் சம்பந்தன் ஐயா சொல்லிவிட்டார்.

பிறகு அதே ஊடகம் அல்லது அதே ஊடகவியலாளர் எழுத்துக்களெல்லாம் இந்தப் போராளிகளை யாரோ தவறாக வழிநடத்துகிறார்களாம். அன்று தான் செய்கின்றபோது சரியாகப்பட்டது. இன்று பிழையாகப்படுகின்றது. அந்த ஊடகவியலாளரை யாரோ பிழையாக வழிநடத்துகின்றார்களா?

போராளிகள் மத்தியில் ஏன் நலன்பேணும் விடயத்தில் திடீர் அக்கறை எனப் போராளிகள் மற்றும் அரசியல்வாதிகள் மத்தியில் அந்தப் பத்தி ஒரு குழப்பத்தை உண்டு பண்ணியிருக்கின்ற நிலைமையை ஏற்படுத்தியுள்ளது.

கூட்டமைப்புக்குள் இருக்கின்ற உட்கட்சி முரண்பாடுகள் அது மக்களுக்கும் எங்களுக்கும் இடையில் பெரிய இடைவெளியைக் கொண்டு வந்திருக்கின்றது.

உங்களையும் பாதித்துச் செல்வதால் இந்த விடயத்தைச் சொல்கின்றேன். விடுதலைப்புலிகளால், தலைவர் பிரபாகரனால் இந்தத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது என்பதனால் அதனுடைய வீழ்ச்சியோ அல்லது மக்களிடம் இருந்து அந்நியப்படுகின்ற ஒரு நிகழ்சித் திட்டமோ எல்லோரையும் பாதிக்கும். எங்களுக்குள் வேறுபாடு இருக்கின்ற போது அதில் உங்களுக்கும் பங்கு இருக்கின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்கின்ற போது தலைவர் விடுகின்ற தவறுகளை அல்லது ஒரு பங்காளிக் கட்சி விடுகின்ற தவறுகளை எப்படி அதில் இருக்கின்றவர்கள் சுட்டிக்காட்ட முடியுதோ அதேயளவுக்கு போராளிகளாகிய உஙகள் ஒவ்வொருவருக்கும் உரிமை உள்ளது.

அரசியல் ரீதியாக உங்களால் வளர்த்தெடுக்கப்பட்ட உங்களின் நலன்களிலும் எதிர்காலத்தில் செயற்படக்கூடிய ஒரு அமைப்பு தவறு செய்யும் பட்சத்தில் அதைத் தடுக்க அல்லது எதிர்த்துக் குரல் கொடுக்கக் கூடிய தகைமை உங்களுக்கும் இருக்கின்றது.

அண்மையில் எங்களது கூட்டமைப்பினுடைய தலைவர் சம்பந்தன் ஐயா, “எங்களுக்குள் எந்தப் பிளவும் இல்லை. ஒற்றுமையாகத்தான் இருக்கின்றோம். நாடாளுமன்ற உறுப்பினத்களுக்குள் பிளவு இல்லை” என்ற ஒரு கருத்தைக் கூறியிருந்தார். அது சுத்தப் பொய்.

நாடாளுமன்ற உறுப்பினர்களிடத்தில் ஒற்றுமை இல்லை. கட்சிகளுக்கிடையில் ஒற்றுமை இல்லை. ஒரே கட்சிக்குள்ளேயே பல்வேறு பிரச்சினைகள் இருகின்றன. அண்மையில் எங்களுடைய தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளைத் தலைவராக இருகின்றவர் அண்ணன் தவராசாவே அதனை ஏற்றுக்கொண்டார். நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கூறிய கருத்து உண்மையானது என அவர் ஏற்றுக்கொண்டார்.

அப்படியெனில் முக்கிய தலைவர்களே உணர்திருக்கின்றார்கள். தவறுகள் நடக்கின்றன என்பதை அவர்களே உணர்ந்துள்ளார்கள். சம்பந்தன் ஐயா அதை மறைக்கப் பார்கின்றார். அவரால் தற்போது ஒழுங்காகச் செயற்பட முடியாது. இதனைப் பொதுவெளியில் சொல்லவும் நான் தயாராக இருகின்றேன். அவரால் செயற்பட முடியாத நிலைமை இருக்கின்றது. அதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களிடம் இருந்து அந்நியப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

தமிழ் மக்களுக்குச் சிறந்த ஒரு தலைவர் இல்லாத நிலைமை இருந்து கொண்டு இருக்கின்றது. இதனால் ஒட்டுமொத்த தமிழினமும் பாதிக்கப்படப் போகின்றது. ஒட்டுமொத்த தமிழர் என்கின்ற போது அதற்குள் விடுதலைப்புலிகள், போராளிகள் அடங்காமல் எப்படி இருக்க முடியும்?

நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்படுகின்ற ஆரம்ப காலங்களில், தலைவருடன் சந்திப்பை ஏற்படுத்துகின்ற போது, நாங்கள் ஒன்றாக பேசிய போது, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனைப் பார்த்து தலைவர் பிரபாகரன் கூறினார் “செல்வம் நாங்கள் எல்லாவற்றையும் மறந்து விடுவம். கடந்த காலங்களில் நாங்கள் எல்லோரும் பிழை விட்டிருந்தால் எல்லாவற்றையும் மறந்து எங்களுடைய மக்களுக்காக இந்தக் கூட்டை உருவாக்கி அரசியல் ரீதியாக வெற்றி பெற வேண்டும். நாங்கள் ஒன்றாக இந்த மக்களுக்காக உழைக்க வேண்டும்” என்ற கருத்தைக் கூறியிருந்தார். அதற்குப் பின் நாங்கள் எவ்வளவோ விட்டுக் கொடுப்பு செய்து, பிரிந்திருந்த போராட்ட இயக்கங்கள், மிதவாதக் கட்சிகளை இணைத்து இந்தத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கினோம்.

ஆனால், இன்று கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக கூட்டமைப்பு உள்ளது. முதலில் கூட்டமைப்பில் உள்ள பழைய தலைவர்கள் எல்லாம் தங்களது பதவிகளை இராஜிநாமாச் செய்து விட்டு போராளிகளுக்குச் சந்தர்ப்பம் வழங்கவேண்டும். போராளிகள் என்று நான் சொல்வது இளைஞர்களை.

ஒவ்வொரு கட்சியிலும், இரண்டாம், மூன்றாம் கட்டத் தலைவர்கள் இருந்து கொண்டிருக்கின்றார்கள். எங்களுடைய பழைய தலைவர்கள் எல்லோரும் தோற்றுப்போன தலைவர்களாகத்தான் இருக்கின்றார்கள். தந்தை செல்வா, ஜி.ஜி.பொன்னம்பலம், அமிர்தலிங்கம், இரா.சம்பந்தன் ஆகியோராகக் கூட இருக்கலாம்.

தோற்றுப்போன தலைவர்களாக இருக்கிறார்கள். ஏனைய கட்சிகளின் முக்கிய தலைவர்கள் கூட தாங்கள் தொடர்ந்தும் கட்சியினுடைய தலைவர்களாக இருக்க வேண்டும் என ஆசைப்படுகின்றார்கள். அதற்கான சந்தர்ப்பத்தைக் கொடுக்கக்கூடாது.

வேணும் என்றால் மக்கள் பிரதிநிதிகளாக இருந்துவிட்டுப் போகலாம். மக்களால் தேர்தெடுக்கப்பட்ட ஜனநாயக உரிமை ஊடாக அவர்கள் வரலாம்.

ஆனால் தற்போது இருக்கின்ற அரசியல் கட்சிகள், அரசியல் இயக்கங்களினுடைய தலைவர்கள் எல்லோருமே தோற்றுப்போன தலைவர்கள்தான். மக்களுக்கான விடுதலையை வென்று கொடுக்க முடியாத தலைவர்களாக இருக்கின்றார்கள்.

அவர்கள் தொடர்ந்தும் தலைமைப் பதவியில் இருப்பதற்குத் தகுதி இல்லாத தலைவர்களாகத்தான் இருந்து கொண்டு இருக்கின்றார்கள்.

இது உங்களுடைய விடயம். நீங்கள் போரளிகள். எந்தவித அரசியல் தலையீடுகளுமின்றி, நலன்புரிச் சங்கம் என்ற பெயரில் போராளிகளின் எதிர்காலம், அவர்களுடைய தேவைகள் தொடர்பாகச் செயற்படவுள்ளீர்கள். அவர்களுடைய தேவைகள் உண்மையாக உணரப்பட வேண்டும். அவர்களுடைய தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.

இனத்தின் ஒரு விடுதலைக்காக ஆயுதம் தூக்கிப் போராடிய ஒரே குற்றத்துக்காக இந்தப் போராளிகள் வெறுக்கப்படுகின்றார்கள். ஒவ்வொரு போராளியும் மன ரீதியாக உடைந்து போய் இருக்கின்றார்கள். அவர்களது மனங்கள் அடித்து நொருக்கப்பட்டுள்ளன. சிலருடைய நடவடிக்கைகளே இதற்குக் காரணம். சமூகத்தில் சில இடங்களில் அவர்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றார்கள். உரிய மரியாதை வழங்கப்படுகின்றது. சில இடங்களில் சாதாரண ஒரு பேராளியாகக் கூட மதிக்கப்படாத நிலைமை இருந்துகொண்டிருக்கிறது. மாற்றுத் திறனாளிகளான போராளிகள் கூட நாங்கள் இந்த இனத்துக்காகவா போராடினோம் என்றொரு ஏக்கம், ஏமாற்றம் அவர்களுக்கு இருக்கின்றது. அதனை நாம் உணர்கின்றோம். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

தலைவர்கள் ஒருபோதும் ஒற்றுமைப்படப் போவதில்லை. எனது அனுபவத்தில், அரசியல் தீர்வுக்காய், தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்காக, ஏதோ அரசியல் நடந்துகொண்டுதான் இருக்குமே தவிர, உரிமைக்காகத் தமித் தலைவர்கள் எனத் தமிழ்த் தேசியத்தின் பேரில் சொல்லிக்கொண்டு, அரசியல் நடத்தும் எந்தத் தலைவரும் உண்மையான அக்கறையாகச் செயற்படாதுதான் உள்ளார்கள். நாடாளுமன்றத்திலும் சரி, வெளியிலும் சரி தமிழ் மக்களிள் உரிமைக்காகக் கடைசி வரை இணையப்போவதில்லை.

விக்கினேஸ்வரன் ஐயா அண்மையில் பிரிந்து செயற்படுவது தொடர்பில் நாங்கள் உணர்ந்திருக்கின்றோம் எனக் கூறினார். முழுக்க முழுக்க அவர்தான் காரணம். அவர் உடைப்பதற்காக, சிதைப்பதற்காக, அவருடைய நிகழ்சி நிரலைக் கொண்டு சென்று விட்டு, இன்று கூட்டமைப்பில் இருந்து பிரிந்திருப்பதை உணர்ந்திருக்கின்றேன் என்கிறார். தமிழ் மக்களின் கூட்டுக்குள் அவர் மிகப்பெரிய ஒரு குற்றவாளி. அதேபோல்தான் ஏனையவர்களும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது பலமான ஒரு சக்தி. அதில் தவறுகள் இருகின்றன. அண்மையில் கூட்டமைப்பைப் பற்றி எனது முகநூலில் விமர்சனம் செய்தேன். கூட்டமைப்பு ஒரு விபச்சார இல்லமாகச் செயற்படுகின்றது என நான் குறை கூறினேன். அங்கத்துவக் கட்சி ஒன்றின் செயலாளர் என்னுடைய கட்சியின் தலைவருக்கும், செயலாளருக்கும் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளார்.

முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் கட்சியின் சின்னத்தை விபச்சார வீடாக விமர்சிப்பதாகத் தெரிவித்து கடிதம் வந்தது. நான் விமர்சிப்பேன். தொடர்ந்தும் விமர்சிப்பேன். உள்ளுக்குள் இருந்தாலும், சரி வெளியில் இருந்தாலும் சரி தொடர்ந்தும் விமர்சிப்பேன். ஏனென்றால் இந்தக் கட்சியைப் போராளிகள், ஏனையவர்கள் இணைந்து உறுதியான நிலைப்பாட்டோடு வளர்தெடுத்தடுத்தவர்கள், அதற்காகப் பாடுபட்டவர்கள் நாங்கள்.

இவர்கள் தங்களது சொந்தக் கட்சியை வளர்த்தால் கூட அது கூட்டமைப்பின் பிரச்சினைதான். தமிழரசுக் கட்சிக்குள் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கலாம். அதனை நாங்கள் கூட்டமைப்புக்குள் இருந்து கொண்டு விமர்சிப்போம். தமிழரசுக் கட்சிக்குள் பிளவு என்றாலும் கூட்டமைப்புக்குப் பாதிப்புத்தான். ரொலோவுக்குள் பிளவு என்றாலும், புளொட்டுக்குள் பிளவு என்றாலும் கூட்டமைப்புக்குப் பாதிப்புத்தான். அதனையே பொது வெளியில் கூறுகின்றோம்.

அதற்குப் பிறகு தமிழரசுக் கட்சிக்குள் இருந்தே அந்தக் கட்சியை விமர்சிக்கின்றார்கள். அதுவும் தவறுதானே. நாங்கள் விமர்சித்தால் பிழை. ஒரே கட்சிக்குள் விமர்சித்தால் பார்த்துக் கொண்டு இருக்கின்றார்கள். அந்தச் செயலாளர் இப்ப பார்த்துக் கொண்டுதானே இருக்கிறார். விளக்கம் கேட்டாரா? தவராசா தவறு விடுகின்றார் என்று விளக்கம் கேட்டாரா? சிறிதரன் தவறு விடுகின்றார் என்று விளக்கம் கேட்டாரா? அல்லது சுமந்திரன் தவறு விடுகின்றார் என விளக்கம் கேட்டாரா? தவறுகள் கடந்த காலங்களில் எல்லாம் நடந்தவைதான். நாங்கள் இனியும் திருந்தவில்லை என்றால் பலனில்லை.

தமிழ்த் தலைவர்களில் எனக்கு நம்பிக்கையில்லை. ஒரு வருடத்துக்குள் தமிழ் மக்களுக்குத் தீர்வு காணப்போவதாக ஜனாதிபதி சொல்கின்றார். இவர்கள் விழுந்தடிக்துக்கொண்டு பேசுவோம் என்கிறார்கள். ஆனால், இவர்கள் ஒன்றுபட்டு போய் அங்கு பேசப்போவதில்லை.

ஒரே கட்சியாக இருந்த கஜேந்திரகுமார் கொன்னம்பலம், மணிவண்ணன் இன்று இரண்டு கட்சியாகிவிட்டார்கள். இதேபோல் நாளை எத்தனை கட்சிகள், எப்படி, எப்படி உடையப் போகுதோ தெரியாது. ரணிலுடன் பேச முற்பட்டால் சிலர் பேச முடியாது, சிலர் நிபந்தனை போடனும், அப்படி, இப்படி எனச் சொல்வார்கள்.

நாங்கள் ஒன்றுபட மாட்டோம் என அவர்களுக்குத் தெரியும். அதனால் பிரச்சினைக்குத் தீர்வு இல்லை.

முன்னாள் போராளிகளுக்கு பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் வழங்க அனுமதி தர வேண்டும் என நாடாளுமன்றத்தில் பேசினேன். ஆனால், அவர்கள் வேறு காரணங்களைக் கூறி நிராகரித்து விட்டார்கள்.

போராளிகள் மத்தியில் ஒற்றுமை வராது எனச் சொல்வதற்கு இடம் கொடுக்க முடியாது. ஒற்றுமையாகச் செயற்படுங்கள்.

அன்று போராளிகளுக்கு உதவி செய்ய போவதாகச் சொன்ன யாழ். ஊடகவியலாளர் இன்று இங்கு இருப்பவர்கள் உதவி செய்ய வருவதைக் குற்றம் சாட்டுகின்றார். அன்று அவர் உண்மையில் போராளிகளுக்கு உதவிச் செய்ய சென்றாரா அல்லது தன்னுடைய நலன்களுக்காகச் சென்றாரா என்பது கடவுளுக்கே வெளிச்சம்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.