இந்தியத் தயாரிப்பில் ஆஸ்கர் விருது வென்ற பெண்கள்…இதைவிட சிறப்பான செய்தி இருக்காது- மு.க.ஸ்டாலின்

95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இந்தியத் தயாரிப்பான The Elephant Whisperers என்ற ஆவணப்படம் இந்தியாவிற்கு முதல் ஆஸ்கர் விருதைப் பெற்றுத் தந்துள்ளது. இரண்டு பெண் இயக்குநர்கள் இணைந்து ஆவணப்படுத்திய இந்த படைப்புக்கு ஆஸ்கர் விருது கிடைத்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதல்வரின் ட்விட்டர் பக்கத்தில், “The Elephant Whisperers படத்தின் இயக்குநர்கள் கார்த்திகி கோன்சால்வ்ஸ் மற்றும் குனீத் மோங்கா ஆகியோருக்கு வாழ்த்துகள். காலை எழுந்திருக்கும் போது, இந்தியத் தயாரிப்பில் இரண்டு பெண்கள் இணைந்து ஆஸ்கர் விருது பெற்றுள்ளதை விட ஒரு சிறப்பான செய்தி இருக்காது” என்று கூறியுள்ளார்.

இது போன்ற ஆவணப்படத்தை உருவாக்குவதற்கு இருந்த பொறுமை மற்றும் அனைவரும் ரசிக்கும் விதமாக காட்சிப்படுத்தியது ஆகியவை பாராட்டுக்கு உரியது எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் ஆஸ்கர் வென்ற ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடல் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். படத்தின் இயக்குநர் ராஜமவுலி, இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி, பாடலாசிரியர் சந்திரபோஸ், நடிகர்கள் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் உள்ளிட்டோருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.