“ஹரக் கட்டா” வெளியிட்ட புதிய தகவலால் டிரான், தென்னக்கோன் பெரும் சிக்கலில்!

“முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் ஆகியோர் கோரிய 300 மில்லியன் ரூபாவைக் கொடுக்க மறுத்தமையால்தான் நான் தங்காலை சிறைச்சாலையில் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளேன்.” – என்று பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த “ஹரக் கட்டா” என்றழைக்கபடும் நதுன் சித்தக விக்ரமரத்ன தெரிவித்தார்.
இன்று புதன்கிழமை வழக்கு விசாரணைக்குப் பின்னர் கொழும்பு நீதிமன்ற வளாகத்திலிருந்து பொலிஸாரினால் அழைத்துச் செல்லப்பட்டபோது ஹரக் கட்டா இதனைத் தெரிவித்துள்ளார்.
“என்னிடம் தெரிவிப்பதற்கு பல விடயங்கள் உள்ளன. நான் அவற்றை அப்போது வெளிப்படுத்துவேன்.” – என்று அவர் சிறைச்சாலைக்கு மீண்டும் அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்னர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
தான் தங்காலை சிறையில் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருப்பதால் மாதம் ஒன்றுக்கு 10 மில்லியன் ரூபா செலவு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2023 ஆம் ஆண்டில் ஹரக் கட்டா மற்றும் சலிந்து மல்ஷிகா என்ற குடு சலிந்து ஆகியோர் மடகஸ்காரில் இருந்து குற்றப் புலனாய்வு அதிகாரிகளால் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.
அதன் பின்னர் அவர் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவின் காவலில் தங்காலை பழைய சிறைசாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.