அர்ச்சுனாவின் எம்.பி. பதவியை இரத்துச் செய்யக் கோரும் மனு: ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கிய நீதிமன்றம்.

யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்புரிமையை இரத்துச் செய்யுமாறு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது.

இந்த மனு, இன்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான மாயாதுன்ன கொரயா மற்றும் மஹேன் கொபல்லவ ஆகியோர் அடங்கிய ஆயம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

பிரதிவாதியான இராமநாதன் அர்ச்சுனா சார்பில் முன்னிலையான சட்டத்தரணி செனானி தயாரத்ன, இந்த மனு மீதான ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்யக் கால அவகாசம் வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.

அதன்படி, நான்கு வாரங்களுக்குள் ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்ய நீதியரசர்கள் அமர்வு கால அவகாசம் வழங்கியதுடன், அதில் ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால் இரண்டு வாரங்களுக்குள் தாக்கல் செய்யுமாறு மனுதாரருக்கு அறிவித்தது.

இதேவேளை, இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் செப்டெம்பர் 26 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.