மின்கம்பத்தில் மோதி வான் விபத்து! 11 வயது சிறுவன் பரிதாப உயிரிழப்பு!! – நால்வர் காயங்களுடன் வைத்தியசாலையில்.
வான் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 11 வயதுடைய சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்துச் சம்பவம் மாவத்தகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி – குருநாகல் பிரதான வீதியில் 6 ஆவது மைல் கல்லுக்கருகில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.
கண்டி நோக்கிப் பயணித்த வான் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் வானில் பயணித்த சாரதி உட்பட இரு ஆண்கள், இரு பெண்கள், ஒரு சிறுவன் என ஐந்து பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
எனினும், படுகாயமடைந்த சிறுவன் உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
11 வயதுடைய மாவத்தகம பகுதியைச் சேர்ந்த சிறுவனே உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, மாவத்தகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நால்வரும் மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் மாவத்தகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
……………….
