இலங்கையை வேகமாக ஆக்கிரமிக்கின்றது ‘ஏஐ’ – உலக வங்கி தகவல்.

இலங்கை உட்பட தெற்காசியாவில் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு வேகமாக அதிகரித்துள்ளது என்று உலக வங்கி தனது அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டியுள்ளது.

தெற்காசியாவின் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு தொழிலாளர் சந்தையில் ஏற்படுத்தும் தாக்கம் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“தெற்காசியாவில் நேபாளம் மற்றும் இந்தியாவுடன் ஒப்பிடும்போது, அதிக செயற்கை நுண்ணறிவு பயன்படுத்துவோர் கொண்ட தொழிலாளர் சக்தியைக் கொண்ட நாடுகளாக பூட்டானும் இலங்கையும் மாறியுள்ளன.
ஆயினும் தெற்காசிய நாடுகளில் செயற்கை நுண்ணறிவை மனித நிரப்பியாக அதாவது மனித திறன்களுடன் தொழில்நுட்பத்தைச் சேர்ப்பதில் இலங்கை குறைந்த இடத்தில் உள்ளது. திறன்களை மேம்படுத்தாமல் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு விரைவுபடுத்தப்பட்டால் வேலை இழப்புகள் ஏற்படும்.

இலங்கையில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான வேலைவாய்ப்புச் சந்தை, தெற்காசியாவில் உள்ள மற்ற நாடுகளைவிட வேகமாக விரிவடைந்து வருகின்றது. 2025 ஆம் ஆண்டில் இலங்கையில் உள்ள அனைத்து தொழில்முறை மற்றும் நிர்வாக வேலைவாய்ப்பு அறிவிப்புகளில் 7.3 சதவீதத்துக்கு செயற்கை நுண்ணயிவு தொடர்பான திறன்கள் தேவைப்பட்டுள்ளன. இது பிராந்தியத்திலேயே அதிகபட்ச பங்காகும். இந்தியாவில் இது 5.8 சதவீதத்தைத் தாண்டுகின்றது.

இலங்கையின் நிதித் துறை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்முறை சேவைகளுக்கு செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இலங்கையில் வலுவான செயற்கை நுண்ணறிவு வேலைவாய்ப்புச் சந்தை இருக்க வேண்டும்.

அதேவேளை, செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு காரணமாக தெற்காசியா முழுவதும் உள்ள வேலைவாய்ப்புகளில் சுமார் 7 வீதம் அதிக ஆபத்தில் உள்ளன. அழைப்பு மைய அதிகாரிகள், கணக்காளர்கள், ஒப்புநோக்குபவர்கள், கணினி மென்பொருள் போன்ற பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகளில் ஏற்கனவே சரிவு காணப்படுகின்றது.” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.