புதிய கணக்காய்வாளர் நாயகமாக தர்மபால கம்மன்பிலவை நியமிக்குக! – ஜனாதிபதிக்கு மகாநாயக்க தேரர்கள் கடிதம்.

புதிய கணக்காய்வாளர் நாயகத்தை நியமிப்பது தொடர்பாக மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்து, கூட்டாகக் கடிதம் அனுப்பி வைத்துள்ளனர்.

இதற்கமைய மூத்த மற்றும் அனுபவம் வாய்ந்த அதிகாரியான தர்மபால கம்மன்பிலவை அப்பதவிக்கு நியமிக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தகுதியான ஒருவரைத் தேர்ந்தெடுக்காமல் நீண்டகாலமாக இப்பணியிடம் வெற்றிடமாக இருப்பது பொது நிதி நிர்வாகத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வெளியிலிருந்து ஒருவரை நியமிப்பதற்குப் பதிலாக, உள் கட்டமைப்புக்குள் இருந்தே ஒருவரைத் தெரிவு செய்வது நிறுவனத்தின் ஸ்திரத்தன்மைக்கு உகந்தது என்பது அவர்களின் கருத்தாகும்.

மல்வத்தை மற்றும் அஸ்கிரிய உள்ளிட்ட முக்கிய பீடங்களின் தலைவர்கள் இணைந்து இந்தக் கூட்டு வேண்டுகோளை முன்வைத்துள்ளனர். இதன் மூலம் நாட்டின் நிதி மேற்பார்வையை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை அவர்கள் ஜனாதிபதிக்குத் தெளிவுபடுத்தியுள்ளனர்.

கணக்காய்வாளர் நாயகம் பதவிக்குப் பல மாதங்கள் கடந்தும் இன்னும் ஒருவர் நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்பட்ட பெயரை அரசமைப்பு பேரவை இரு தடவைகள் நிராகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.