பெப்ரவரி 4ஆம் திகதி கரிநாள்; வடக்கு – கிழக்கில் போராட்டம்! – ஆதரவு திரட்டும் யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம்.

இலங்கையின் சுதந்திர தினமான எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதியை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போராட்டம் நடத்தத் தீர்மானித்துள்ள யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், அதற்காகப் பொதுமக்களை அணிதிரட்டி வலுச்சேர்க்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.

அதன்படி, மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதிகள் நேற்று கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு சென்று, அங்குள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கங்கள், பொது அமைப்புகள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து கலந்துரையாடினர்.

மேலும், எதிர்வரும் சில தினங்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள எட்டு மாவட்டங்களுக்கும் சென்று, போராட்டத்துக்கான ஆதரவைத் திரட்டும் கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளதாக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

தமிழர் தேசத்தின் மீது நூற்றாண்டுகளாகச் சூழ்ந்துள்ள பேரினவாதத்தீயிலிருந்து தமிழர் தாயகத்தைப் பாதுகாக்கவும், தலைமுறைகள் தாண்டிய இனத்தின் இருப்பை உறுதிப்படுத்தவும், வடக்கு மாகாணத்தில் கிளிநொச்சி மாவட்டத்திலும், கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி போராட்டம் நடைபெறவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.