இலங்கையின் 78 ஆவது சுதந்திர தின நிகழ்வுக்கு வெளிநாட்டுப் பிரமுகர்களுக்கு அழைப்பு இல்லை.
இலங்கையின் 78 ஆவது சுதந்திர தின விழாவுக்கு வெளிநாடுகளில் இருந்து பிரமுகர்கள் அழைக்கப்படவில்லை. ஜனாதிபதி தலைமையிலேயே நிகழ்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் 78 ஆவது சுதந்திர தின விழா எதிர்வரும் 4 ஆம் திகதி “கட்டியெழுப்புவோம் இலங்கையை” எனும் கருப்பொருளின் கீழ் சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளது.
இதற்குரிய ஏற்பாடுகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.
பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி துறை அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன, அமைச்சின் செயலாளர், பாதுகாப்பு செயலாளர், பொலிஸ்மா அதிபர் உள்ளிட்டோர் ஊடக சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது வெளிநாட்டுப் பிரமுகர்கள் அழைக்கப்பட்டுள்ளனரா என்ற கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன,
“கொழும்பிலுள்ள தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள், இராஜதந்திரிகள் மற்றும் வெளிவிவகாரத்துறையுடன் தொடர்புடையவர்கள் பங்கேற்பார்கள். வெளிநாடுகளில் இருந்து பிரமுகர்கள் அழைக்கப்படவில்லை.” – என்று குறிப்பிட்டார்.
