வடக்கில் நிழல் அமைச்சர்கள் ஊடாக ஆட்சி செய்ய அரசு சதி! – முதுகெலும்பில்லாவர்கள் எனக் கஜேந்திரகுமார் எம்.பி. தாக்கு.

வடக்கு மாகாண சபை இயங்காமல் இருக்கின்ற நிலையில், மாகாண அதிகாரங்களுக்கு உட்பட்ட ஒவ்வொரு துறைக்கும் நிழல் அமைச்சர்களை நியமித்து ஆட்சி செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“அமைச்சர் பிமல் ரத்நாயக்க அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்தார். இதன்போது, வடக்கு மாகாணத்தில் நிழல் அமைச்சர்களை நியமித்து அவர்கள் ஊடாக ஆட்சியைக் கொண்டுநடத்துமாறு அவர் வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகனுக்கு உத்தரவிட்டுள்ளார். இதை நான் பொறுப்புடன் கூறுகின்றேன்.

சுகாதாரத்துறைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீபவானந்தராஜாவும், கல்வி அமைச்சுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரனும், மகளிர் விவகாரத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவனும், உள்ளூராட்சி சபைகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனும், விவசாயம் மற்றும் கால்நடைத் துறைகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் திலகநாதனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வடக்கு மாகாணத்தில் சுகாதார அமைச்சு சார்பான கூட்டம் அண்மையில் நடைபெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் சிறீபவானந்தராஜா அதில் அழைக்கப்பட்டிருந்தார். எந்த அடிப்படையில் அவரை அழைத்தீர்கள்? அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இந்தக் கலந்துரையாடலுக்கு அழைத்திருக்க வேண்டும். அதைவிடுத்து, இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவது மிகக் கேவலமான மனோநிலை.

வடக்கு மாகாண சபைக்கு எதிரானவர்கள் என்றும், அந்த நிர்வாகக் கட்டமைப்புக்கு எதிராகப் போராடி உயிர்த் தியாகம்கூட செய்தவர்கள் எனவும் கூறுகின்றீர்கள். ஆனால், அதே மாகாண சபைக் கட்டமைப்பில் திருட்டுத்தனமாக உங்களின் ஆட்களைப் புகுத்துகின்றீர்கள். இதுவொரு முதுகெலும்பில்லாத பண்பு. இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடவேண்டாம் என அரசைக் கோருகின்றோம்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.