மத்திய கிழக்கு போரில் 4 இலங்கையர்கள் காயம் – பிரதி அமைச்சர் தகவல்.

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்ற நிலைமை காரணமாக நான்கு இலங்கையர்கள் காயமடைந்துள்ளனர் என்று வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார்.

காயமடைந்த நால்வரும் சிகிச்சைகளின் பின்னர் தற்போது வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் வாழும் இலங்கையர்களின் பாதுகாப்புக்கு அரசு முன்னுரிமை அளித்துள்ளதோடு, தூதரகங்கள் ஊடாக அவர்களின் நிலைமைகள் குறித்துத் தொடர்ச்சியாக ஆராயப்பட்டு வருகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான ஈரானின் இராணுவ மோதல்கள் தொடர்ந்தும் நீடித்து வருகின்றன. அண்டை நாடுகள் மீது இனி தாக்குதல் நடத்தப்போவதில்லை எனவும், இதுவரை நடத்திய தாக்குதல்களுக்காக மன்னிப்புக் கோருவதாகவும் ஈரான் ஜனாதிபதி அறிவித்திருந்த போதிலும், கள நிலைவரம் வேறாகக் காணப்படுகின்றது.

ஈரானியப் படைகள் தொடர்ந்தும் குவைத், கத்தார், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளின் மீது தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றன என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில், வான் பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன் ஒன்றின் பாகங்கள் வீழ்ந்ததில், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளமை சர்வதேச ஊடகங்கள் வாயிலாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு அபாயகரமான சூழலில், வளைகுடா நாடுகளில் பணியாற்றும் இலங்கையர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.